Paristamil Navigation Paristamil advert login

தென்கொரியாவில் சாம்சங் நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

தென்கொரியாவில் சாம்சங் நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

24 சித்திரை 2026 வெள்ளி 10:34 | பார்வைகள் : 268


தென்கொரியாவில் உள்ள சாம்சங் நிறுவனத்தின் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் சம்பள உயர்வு, போனஸ் கொடுப்பனவு கோரி 18 நாள் தொடர் போராட்டத்தை நேற்று வியாழக்கிழமை (23) ஆரம்பித்தனர்.

இந்தப் போராட்டத்தில் சுமார் 40,000 ஊழியர்கள் கலந்துகொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த நிறுவனமானது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக பெரும் லாபத்தை அடைந்து வருகிறது.

இந்நிலையில், லாபத்துக்காக உழைத்த தமக்கு உரிய போனஸ், சம்பள உயர்வை ஊழியர்கள் நிறுவனத்திடம் கோரியும் வழங்கப்படவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் வரையிலான இந்த காலாண்டில் மட்டும் சுமார் 57.2 ட்ரில்லியன் வோன் வருவாயை நிறுவனம் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

“ஊதியம் வழங்குவதில் வெளிப்படைத்தன்மை வேண்டும், போனஸ்களுக்கான உச்சவரம்பை நீக்குங்கள்” என்று முழக்கமிட்டதோடு, பல்வேறு வாசகங்கள் குறிப்பிடப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஓரிடத்தில் கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சாம்சங் நிறுவனத்தின் போட்டி நிறுவனமான எஸ்.கே.ஹைனிக்ஸ் (SK Hynix), இந்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், அதன் மிகச் சிறந்த காலாண்டு சாதனை வருவாய் மற்றும் லாபத்தை அறிவித்த நாளான நேற்றைய தினமே, சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஊழியர்கள் கோரிய 7 சதவீத சம்பள உயர்வு, லாபத்தில் 15 சதவீத போனஸை வழங்க சாம்சங் நிறுவனம் மறுத்து வருகிறது.

இந்த பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தால், எதிர்வரும் மே மாதம் 21ஆம் திகதியிலிருந்து தொடர்ச்சியாக 18 நாட்கள் பாரியதொரு வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்தவிருப்பதாக ஊழியர்கள் நிறுவனத்தின் தொழிற்சங்கத் தலைவர் சோய் சியுங் ஹோ தெரிவித்துள்ளார்.

அவ்விதமாக நிறுவன ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால் பெரும் நஷ்டத்தையும் வருமான இழப்பையும் நிறுவனம் எதிர்கொள்ள நேரிடும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.