Paristamil Navigation Paristamil advert login

வான்வழித் தாக்குதலில் ஈரானின் முக்கிய தலைவர் மரணம்

வான்வழித் தாக்குதலில் ஈரானின் முக்கிய தலைவர் மரணம்

10 சித்திரை 2026 வெள்ளி 07:07 | பார்வைகள் : 325


வான்வழித் தாக்குதலில் ஏற்பட்ட காயங்களால், ஈரானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், தற்போதைய வெளியுறவு உறவுகளுக்கான மூலோபாயக் குழுவின் தலைவருமான கமால் கராசி (Kamal Kharrazi), காலமானார் ஈரானின் ஐ.ஆர்.என்.ஏ (IRNA) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த வாரம் தெஹ்ரானில் உள்ள அவரது இல்லத்தின் மீது நடத்தப்பட்ட அமெரிக்க - இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் அவர் படுகாயமடைந்தார்.

அந்தத் தாக்குதலில் அவரது மனைவியும் கொல்லப்பட்டதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

ஈரானின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான (1997-2005) அவர் ஈரானின் தற்போதைய உச்ச தலைவரின் மூத்த ஆலோசகராகவும் செயற்பட்டு வந்தார்.

தெஹ்ரானின் அஜூரானியே பகுதியில் உள்ள அவரது இல்லத்தின் மீது ஏப்ரல் 1ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டது.

ஈரானுக்கும் அமெரிக்க-இஸ்ரேல் தரப்புக்கும் இடையே நிலவும் தற்போதைய போர்ச் சூழலில், ஈரானின் முக்கிய அரசியல் மற்றும் பாதுகாப்புத் தலைவர்கள் இலக்கு வைக்கப்பட்டு வரும் நிலையில் இந்த உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

ஈரானின் வெளியுறவுக் கொள்கைகளில் முக்கிய பங்கு வகித்த ஒரு மூத்த இராஜதந்திரி காலமானது பிராந்திய அரசியல் மற்றும் தற்போதைய போர் நிலைமைகளில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.