அண்ணாமலை நேர்மையான அரசியல்வாதியா?: செந்தில்பாலாஜி கேள்வி
8 சித்திரை 2026 புதன் 06:34 | பார்வைகள் : 179
அண்ணாமலை நேர்மையான அரசியல்வாதியா,'' என, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளரும், மேற்கு மண்டல பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி, சித்தாபுதுாரில் நேற்று ஆதரவு திரட்டினார்.
அப்போது, நிருபர்களிடம் கூறியதாவது:
கோவை தெற்கு தொகுதியில், செல்லும் இடங்களில் அடிப்படை வசதிகள் கோரியுள்ளனர். தி.மு.க., அரசு அமைந்ததும் அவற்றை நிறைவேற்றுவோம். 2021 தேர்தலில் அரவக்குறிச்சியில் அண்ணாமலை போட்டியிட்ட போது, வாக்காளர்களுக்கு ரூ.1,000 பணம் கொடுத்தாரா, இல்லையா என சொல்லச் சொல்லுங்கள். அவர் நேர்மையான அரசியல்வாதியா.
சுயேச்சைகள் அவரவர் விருப்பப்படி வேட்பு மனு தாக்கல் செய்கின்றனர். இதில், அரசியல் கட்சியினரின் பங்கு எங்கு இருக்கிறது. என்னுடைய வேட்பு மனு ஏற்கப்பட்டதால், மாற்று வேட்பாளர் மனு நிராகரிக்கப்பட்டது.
தேர்தல் பணியில் கரூரை சேர்ந்த 10 பேரை காட்டுங்கள். கடந்த லோக்சபா தேர்தலில் அண்ணாமலை போட்டியிட்டாரே; அவருக்கு வேலை செய்தவர்கள் அனைவரும் கோவையை சேர்ந்தவர்களா. 'வார் ரூம்' அமைந்திருந்தாரே; அதில் வேலைபார்த்தவர்கள் யார்.
மெட்ரோ திட்ட அறிக்கையில் புள்ளிவிபரம் சரியாக இல்லையெனில், திருப்பி அனுப்பி, கூடுதல் தகவல் பெற வேண்டும். பல ஆண்டுகளாக நிலுவை வைத்து விட்டு, நிராகரிப்பது ஏன்? அதற்கு காரணம், மக்கள் தொகைகுறைவு என்கின்றனர். இதை விட மக்கள் தொகை குறைவாக உள்ள நகரங்களுக்கு மெட்ரோ திட்டம் கொடுத்திருக்கின்றனர்.
இதுவரை ஐந்து தேர்தல்களில் போட்டியிட்டேன்; ஐந்திலும் வெற்றி பெற்றேன். இது ஆறாவது தேர்தல். என்ன செய்வோம்; என்ன செய்திருக்கிறோம். இனி என்ன செய்யப் போகிறோம் என்கிற நம்பிக்கையை ஏற்படுத்தி, ஓட்டு சேகரிப்பதே எங்கள் இலக்கு. இவ்வாறு, அவர் கூறினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan