Paristamil Navigation Paristamil advert login

இளைஞர்களில் அதிகரிக்கும் ‘ஹிலேரியஸ்’ வாயு பயன்பாட்டுக்கு கடும் சட்ட நடவடிக்கை – உள்துறை அமைச்சர் அறிவிப்பு!!

இளைஞர்களில் அதிகரிக்கும் ‘ஹிலேரியஸ்’ வாயு பயன்பாட்டுக்கு கடும் சட்ட நடவடிக்கை – உள்துறை அமைச்சர் அறிவிப்பு!!

25 பங்குனி 2026 புதன் 07:45 | பார்வைகள் : 558


குற்றச்செயல்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை கட்டுப்படுத்தும் விரிவான சட்டத்திருத்தத்தின் ஒரு பகுதியாக, ‘புரோட்டாக்சைடு டி அசோட்’ (protoxyde d’azote) எனப்படும் “சிரிப்பு வாயு” தவறாக பயன்படுத்தப்படுவதற்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சட்டத்திருத்தம் புதன்கிழமை அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

உள்துறை அமைச்சர் Laurent Nuñez 24ம் திகதி செவ்வாய்க்கிழமை TF1 தொலைக்காட்சியில் உரையாற்றியபோது, இவ்வாயுவை தவறாக பயன்படுத்துவதை கட்டுப்படுத்த புதிய மூன்று வகை குற்றங்களுக்கான சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக தெரிவித்தார். 

இதன்படி, இந்த வாயுவை உட்கொள்வது, அதன் தாக்கத்தில் வாகனம் ஓட்டுவது மற்றும் காரணமின்றி அதை எடுத்துச் செல்வது ஆகியவை தனித்தனியான குற்றங்களாக அறிவிக்கப்படும். இந்த வாயுவை உட்கொள்வோருக்கு ஒரு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் 3,750 யூரோ அபராதம் விதிக்கப்படலாம்; அதேவேளை 200 யூரோ உடனடி அபராதமும் விதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.

மேலும், இந்த வாயுவை காரணமின்றி எடுத்துச் செல்வோருக்கு இரண்டு ஆண்டு சிறை மற்றும் 7,500 யூரோ அபராதமும், அதன் தாக்கத்தில் வாகனம் ஓட்டுவோருக்கு மூன்று ஆண்டு சிறை மற்றும் 9,000 யூரோ அபராதமும் விதிக்கப்படும். இதன் விற்பனையும் கடுமையாக கட்டுப்படுத்தப்படும்; குறிப்பாக இரவு நேரங்களில் விற்பனைக்கு தடை விதிக்கப்படும். சட்டவிரோத விற்பனைக்கு ஆறு மாத சிறை மற்றும் 7,500 யூரோ அபராதம் விதிக்கப்படுவதுடன், விதிமுறைகளை மீறும் கடைகள் நிர்வாக ரீதியாக மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்திருத்தத்தில் மோட்டார் வாகன அட்டகாசங்கள், போதைப்பொருள் பயன்பாடு மற்றும் விளையாட்டு மைதானங்களில் இடம்பெறும் வன்முறைகளை கட்டுப்படுத்தும் புதிய நடவடிக்கைகளும் இடம்பெற்றுள்ளதுடன், விசாரணை அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரங்களும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.