Paristamil Navigation Paristamil advert login

மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

13 மாசி 2026 வெள்ளி 11:40 | பார்வைகள் : 184


மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது;

நமது அரசு சார்பில் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் உங்கள் வங்கி கணக்கிற்கு வந்து சேர்ந்திருக்கும். எதற்காக இந்தப் பணம்? நாங்கள் ஆட்சிப் பொறுப்பேற்றபோது கொரோனா உச்சத்தில் இருந்தது. அதை சமாளித்து மக்களின் உயிரை காத்தது மட்டுமின்றி, வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற 4 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கினோம். .சென்ற ஆட்சி விட்டுச் சென்ற கடுமையான நிதி நெருக்கடியை சமாளித்து, ஆட்சிக்கு வந்ததும் பல திட்டங்களை நிறைவேற்றினோம்.

நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு மாதம் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என அறிவித்தேன். அது சாத்தியமே இல்லை என சிலர் சொன்னார்கள். ஆனாலும் நிதி நெருக்கடியை சமாளித்து, மத்திய அரசின் ஓரவஞ்சனையை மீறி, கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறோம். முதலில் 1 கோடியே 13 லட்சம் மகளிருக்கு பயனளித்த இந்த திட்டம், அண்மையில் விரிவுபடுத்தப்பட்டு, இப்போது 1 கோடியே 31 லட்சம் குடும்பத் தலைவிகள் பயன்பெற்று வருகிறார்கள்.

இந்த உரிமைத் தொகையை மேம்படுத்த வேண்டும் என நாம் செயல்பட்டு வந்தால், அதற்கு எதிராக டெல்லியில் இருக்கும் ஒரு கூட்டமும், அவர்களுக்கு அடிமையாக தமிழ்நாட்டில் இருக்கும் இன்னொரு கூட்டமும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி மகளிர் உரிமைத் தொகையை நிறுத்த சூழ்ச்சி செய்வதாக தகவல் வருகிறது. தமிழ்நாட்டு மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை.

யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். இந்த திட்டத்தை 3 மாதங்கள் நிறுத்தி வைத்தால் நீங்கள் எவ்வளவு சிரமத்திற்கு ஆளாவீர்கள் என்பது உங்கள் வீட்டில் ஒருவனாக எனக்கு நன்றாக தெரியும்..இந்த கஷ்டத்தை எல்லாம் நினைத்துப் பார்த்து ஒரு முக்கியமான முடிவு எடுத்திருக்கிறேன்.

அதன்படி பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் மற்றும் கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம் என 1.31 கோடி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு வைக்கப்பட்டிருக்கிறது.

வெல்லும் தமிழ்ப் பெண்கள் ஆதரவோடு அடுத்தும் நாங்கள்தான் வெல்வோம்! திராவிட மாடல் ஆட்சி 2.0-இல் ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகையை 2 ஆயிரமாக உயர்த்தி வழங்குவோம்! இது, என் சகோதரிகளுக்கு இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!”இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்