Paristamil Navigation Paristamil advert login

பா.ஜ.,வில் அண்ணாமலைக்கு சக்திகேந்திர அமைப்பை நிர்வகிக்க புதிய பொறுப்பு

பா.ஜ.,வில் அண்ணாமலைக்கு சக்திகேந்திர அமைப்பை நிர்வகிக்க புதிய பொறுப்பு

13 மாசி 2026 வெள்ளி 08:25 | பார்வைகள் : 146


தமிழக பா.ஜ.,வில் 6 தொகுதிகளுக்கான பொறுப்பாளர் பதவியை ஏற்க மறுத்த முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலைக்கு, மாநில அளவில் சக்திகேந்திர அமைப்பை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல்நாளே பிப்.,17 முதல் 28 வரை தெருமுனைக் கூட்டங்கள் நடத்த அவர் சக்திகேந்திர அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

பா.ஜ., சில நாட்களுக்கு முன் 234 தொகுதிகளுக்கும் பொறுப்பாளர்களை நியமித்தது. முன்னாள் தலைவர் அண்ணாலை மதுரை தெற்கு, காரைக்குடி, விருகம்பாக்கம், சிங்காநல்லுார், ஸ்ரீவைகுண்டம், பத்மநாதபுரம் ஆகிய தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

ஆனால் தனது தந்தையை கவனிக்க வேண்டி இருப்பதால் இப்பொறுப்பை ஏற்கப்போவதில்லை என்று கூறிவிட்டார். அவர் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் பரவின. டில்லியில் இருந்து தேசிய அளவில் கட்சியின் அமைப்பு பொறுப்பாளராக உள்ள பி.எல்.சந்தோஷ் சமீபத்தில் சென்னை வந்து நிர்வாகிகளை சந்தித்தார். இதையடுத்து மாநில அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

அதேசமயம் அண்ணாமலைக்கு மாநில அளவில் சக்திகேந்திரா அமைப்பினரை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆகியோர் பங்கேற்ற வீடியோகான்பரன்சிங் மூலம் நடந்த ஒரு கூட்டத்தில் இதனை தெரிவித்துள்ளனர். இதில் மாநில அளவில் சட்டசபை தொகுதி பொறுப்பாளர்கள், இணை பொறுப்பாளர்கள், அமைப்பாளர்கள், இணை அமைப்பாளர்கள், மாவட்ட தலைவர்கள் பங்கேற்றனர். அவர்களிடம் இதுபற்றி விளக்கியுள்ளனர்.

தமிழகத்தில் 22 ஆயிரம் சக்திகேந்திரங்கள், 68 ஆயிரம் ஓட்டுச்சாவடிகளை முழுமையாக செயல்படுத்த சக்திகேந்திர அளவில் (3 ஓட்டுச்சாவடிகள் சேர்ந்த அமைப்பு) மாலையில் தெருமுனைக் கூட்டங்கள் நடத்த வேண்டும். பிப்.,17 முதல் 28க்குள் இக்கூட்டங்களை நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான நோட்டீஸ்களில் தகவல்கள், அ.தி.மு.க.,வின் பழனிசாமி, பா.ஜ.,வின் நயினார்நாகேந்திரன் போட்டோக்கள் கட்டாயம் இடம்பெற வேண்டும். உள்ளூர் நிர்வாகிகள், கூட்டணி தலைவர்கள் இடம்பெறுவதும் நல்லது.

இருநாட்களில் தெருமுனைக் கூட்டம் நடக்கும் இடம், தேதி, பேச்சாளர் பற்றிய விவரங்களை சக்திகேந்திர தலைமையிடம் தெரிவிக்க வேண்டும். ஒரு சட்டசபைக்கு குறைந்தது 80 பேச்சாளர்களை பட்டியலிட வேண்டும். கூட்டம் நடத்த ஒவ்வொரு சக்திகேந்திரத்திற்கும் உதவித்தொகை வழங்கப்படும்.

தெருமுனை கூட்டங்களில் திருப்பரங்குன்றம் தீபத்துாண் பிரச்னை, தி.மு.க., அரசின் ஊழல், சம்பந்தப்பட்ட தொகுதியில் உள்ள பிரச்னைகள், சக்திகேந்திர பகுதியின் பிரச்னைகள் பற்றி பேச வேண்டும்' எனவும் அறிவுரை வழங்கியுள்ளனர்.

மாநில அளவிலான பொறுப்பு கிடைத்துள்ளதால் அண்ணாமலை அதை செயல்படுத்த சுறுசுறுப்புடன் களமிறங்கியுள்ளார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்