Paristamil Navigation Paristamil advert login

பார்லியில் விதி மீறிய எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை ! பாஜ பெண் எம்பிக்கள் கடிதம்

பார்லியில் விதி மீறிய எதிர்க்கட்சியினர் மீது நடவடிக்கை ! பாஜ பெண் எம்பிக்கள் கடிதம்

11 மாசி 2026 புதன் 08:32 | பார்வைகள் : 175


பார்லிமென்ட் அவைக்குள் விதிகளை மீறிய எதிர்க்கட்சி எம்பிக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு பாஜ பெண் எம்பிக்கள் கடிதம் எழுதி உள்ளனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் பிரதமர் மோடியின் பதிலுரை இல்லாமல் முதல் முறையாக மசோதா நிறைவேறியது. இதற்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து உயர்த்திய போர்க்கொடி தான் காரணம். அவர்கள் விவாதத்தை நடத்த விடாமல் அவைக்குள் நடுவில் ஒன்று கூடி அமளியில் ஈடுபட்டு தொந்தரவு அளித்தனர்.

அவைக்குள் விதிகளை மீறிய எதிர்க்கட்சி எம்பிக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு பாஜ பெண் எம்பிக்கள் கடிதம் எழுதி உள்ளனர்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

பிப்ரவரி 4ம் தேதி ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, லோக்சபாவின் கண்ணியம் மற்றும் புனிதத்தை காக்க உங்களது செயல்பாட்டிற்கு நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறோம். அன்று முழு தேசமும், லோக்சபா அறைக்குள் மிகவும் துரதிர்ஷ்டவசமான மற்றும் வருந்தத்தக்க சம்பவங்களில் ஒன்றைக் கண்டது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவைக்குள் விதிகளை மீறி செயல்பட்டனர்.

சபாநாயகரின் மேஜையில் ஏறி கோஷம் எழுப்பினர். காகிதங்களைக் கிழித்து உங்களை நோக்கி வீசியதைக் கண்டோம். துரதிர்ஷ்டவசமாக பெண் எம்பிக்களும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டனர். பதாகைகளை கையில் ஏந்தியப்படி கோஷங்களை எழுப்பினர். அவர்கள் பிரதமரின் இருக்கையைச் சுற்றி வளைத்தது மட்டுமல்லாமல், மூத்த அமைச்சர்களின் அமரும் இடத்திற்குள் நுழைந்தனர்.

அங்கு இருக்கையில் அமர்ந்து அத்துமீறி செயல்பட்டனர். எனவே அவை வளாகத்திற்குள் இதுபோன்ற கொடூரமான செயல்களைச் செய்து நமது ஜனநாயக நிறுவனங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்திய எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீது, விதிகளின் கீழ், கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பாஜ பெண் எம்.பி.க்கள் சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்