தி.மு.க., வட மாவட்டங்களில் அதிருப்தி : உளவுத்துறை அறிக்கை
2 மாசி 2026 திங்கள் 12:53 | பார்வைகள் : 683
தி.மு.க., அரசு மீது, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலுார் உள்ளிட்ட வட மாவட்டங்களில், கடும் அதிருப்தி இருப்பது, உளவுத்துறை அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
உளவுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது:
உளவுத்துறை சார்பில், கடந்த ஒரு மாதமாக, மாவட்ட வாரியாக ரகசிய சர்வே எடுத்தனர். அதில், வட மாவட்டங்களில், தி.மு.க., மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருப்பது தெரிந்தது. தென் மற்றும் கொங்கு மாவட்டங்களுக்கு, அதீத முக்கியத்துவம் கொடுத்த ஆட்சி மேலிடம், வட மாவட்டங்களை கண்டுகொள்ளாததே இதற்கு காரணம்.
குறிப்பாக, வேலுார் மாவட்டத்தில், அமைச்சர் துரைமுருகன், எம்.பி., கதிர் ஆனந்த் பதவியில் இருந்தும், எதுவுமே செய்யவில்லை என கடுமையான அதிருப்தி உள்ளது. அங்கிருக்கும் வன்னியர் சமூகம் மத்தியில் அ.தி.மு.க கூட்டணியும், தலித் சமூகத்துக்கிடையே த.வெ.க.,வும் வளர்ந்து வருவதால், தி.மு.க., கடுமையான பின்னடைவை சந்திக்கிறது.
அதேபோல் தான், ராணிப்பேட்டையில் அமைச்சர் காந்தி மீதான அதிருப்தி, தி.மு.க.,வுக்கு எதிராக உள்ளது. குறிப்பாக, தி.மு.க.,வினர் நடத்தும் கல் குவாரிகளால், பாதிக்கப்படும் கிராமத்தினர், மொத்தமாக அரசுக்கு எதிராக மாறி உள்ளனர்.
விழுப்புரத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணிக்கு கிடைக்கும் முக்கியத்துவத்தால், தி.மு.க., நிர்வாகிகளே தலைமைக்கு எதிரான மனநிலையில் உள்ளனர்.
இம்மூன்று மாவட்டங்களில், அரசுக்கு எதிராக எழுந்திருக்கும் அதிருப்தி திருப்பத்துார், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி என அண்டை மாவட்ட மக்களிடமும் உள்ளது. இந்த மாவட்டங்களில் உள்ள, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள், தங்களுக்கு எதுவுமே செய்யவில்லை என, மக்கள் கோபத்தில் இருக்கின்றனர்.
வட மாவட்டங்களில் இருக்கும் அதிருப்தியை சரி செய்ய, கூட்டணி கட்சிகளின் வலிமையும் தி.மு.க.,வுக்கு கைகொடுக்கவில்லை. கூட்டணி கட்சிகளின் செயல்பாடும், தி.மு.க.,வையே பாதிக்கிறது.
கடந்த 2021ல் ஆட்சியை பிடிக்க காரணமாக இருந்த வட மாவட்டங்கள், 'வீக்' ஆகிவிட்டதால், உளவுத் துறையின் அறிக்கை, முதல்வர் ஸ்டாலினை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan