Paristamil Navigation Paristamil advert login

ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு புதிய விதிமுறை: மத்திய உள்துறை அமைச்சகம்

ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு புதிய விதிமுறை: மத்திய உள்துறை அமைச்சகம்

2 மாசி 2026 திங்கள் 09:38 | பார்வைகள் : 658


மத்திய அரசு பணிகளில், ஐ.ஜி., அந்தஸ்திலான பதவிகளை பெற விரும்பும் ஐ.பி.எஸ்., அதிகாரிகள், இனி, அதற்கு முன்னதாக, சி.பி.ஐ., உள்ளிட்ட மத்திய அரசு பணிகளில், எஸ்.பி., மற்றும் டி.ஐ.ஜி.,யாக, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள், கட்டாயம் பணியாற்றி இருக்க வேண்டும்' என்ற புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.

மத்திய உள்துறை அமைச்சகம், இந்திய காவல் பணி தேர்வான, ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்குவது மற்றும் மத்திய அரசு பணிகளில் நியமிப்பது தொடர்பான விதிமுறைகளில், புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது.

அதன்படி, சி.பி.ஐ., உள்ளிட்ட மத்திய அரசு பணிகளில், ஐ.ஜி., அந்தஸ்தில் உள்ள பதவிகளை பெறுவதற்கு, ஐ.பி.எஸ்., அதிகாரிகள், அதற்கு முன்னதாக, எஸ்.பி., மற்றும் டி.ஐ.ஜி.,களுக்கான மத்திய அரசு பணிகளில், குறைந்த பட்சம் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்து இருக்க வேண்டும்.

இந்த விதிமுறை, 2011 மற்றும் அதற்கு பின், ஐ.பி.எஸ்., அதிகாரிகளாக தேர்வு செய்யப்பட்டோருக்கு மட்டுமே பொருந்தும்.

இனி, மாநில அரசுகள், ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றம் செய்ய திட்டமிடும் போது, இந்த புதிய விதிமுறை கடைப்பிடிக்கப்பட்டு உள்ளதா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என, மாநிலங்களின் தலைமைச் செயலர்கள், டி.ஜி.பி.,க்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. இந்த புதிய விதிமுறை, ஜன.,28 ல் இருந்து அமலுக்கு வந்து இருப்பதாகவும் அறிவித்து உள்ளது.

இதற்கு முன், ஐ.ஏ.எஸ்., அதிகாரிளுக்கு மட்டுமே, இத்தகைய இரண்டு ஆண்டுகள் கட்டாய பணி விதிமுறை அமலில் இருந்தது. தற்போது, ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கும் கட்டாயமாக்கப்பட்டு உள்ளதால், இரு தரப்பினருக்குமான பணி வரன்முறை சமன் செய்யப்பட்டு உள்ளது என, காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

வர்த்தக‌ விளம்பரங்கள்