Paristamil Navigation Paristamil advert login

பாலஸ்தீனம் தனி நாடாக உருவாக இந்தியா ஆதரவு !

பாலஸ்தீனம் தனி நாடாக உருவாக இந்தியா ஆதரவு !

2 மாசி 2026 திங்கள் 06:19 | பார்வைகள் : 1558


இந்தியா மற்றும் 19 அரபு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம், பிரதமர் மோடி தலைமையில் டில்லியில் நடந்தது.

அப்போது, எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு இரு தரப்பிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. பயங்கரவாத வலையமைப்புகள், நிதி மற்றும் உட்கட்டமைப்புகளை அழிக்க சர்வதேச அளவிலான கூட்டு செயல்பாடு அவசியம் என்பதை, கூட்டத்தில் பங்கேற்ற அரபு நாடுகள் ஒப்புக்கொண்டன.

இந்தக் கூட்டத்திற்கு பின், நம் நாடும் அரபு நாடுகளும் இணைந்து கூட்டு பிரகடனத்தை வெளியிட்டன. அதில், பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதை ஒழிக்க தேவையான கூட்டுறவை தீவிரப்படுத்துவது என்றும், பயங்கரவாதத்திற்கு எதிராக நம் நாடு எடுத்து வரும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுமையான மற்றும் நிலையான ஆதரவு தருவது என்றும் அரபு நாடுகள் உறுதியளித்துள்ளன.

இந்த கூட்டத்தின் போது, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்னைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. குறிப்பாக, பாலஸ்தீனம் சுதந்திரமான, இறையாண்மை கொண்ட நாடாக உருவாக வேண்டும் என்பதற்கு, நம் நாடு முழு ஆதரவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.காசாவில் புனரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வசதியாக, அரபு நாடுகளின் திட்டப்படி சண்டை நிறுத்தம் முழுதாக அமல்படுத்த வேண்டும் என, நம் நாடு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

குறிப்பாக, கடந்த ஆண்டு எகிப்தின் ஷரம் எல் -ஷேக்கில் நடந்த அமைதி உச்சி மாநாட்டில் காசா தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு நம் நாடு வரவேற்பு அளித்தது.அமெரிக்க அதிபர் டிரம்ப் சமீபத்தில் காசா அமைதி வாரியத்தை அமைத்த நிலையில், இந்தியா - அரபு நாடுகள் இடையே நடந்த இந்த கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

நம் நாடு சுதந்திரம் அடைந்த முதலே பாலஸ்தீனம் தனி நாடாக உருவாக வேண்டும் என ஆதரவு தெரிவித்து வருகிறது. இஸ்ரேலுடன் நெருக்கமாக இருந்தாலும், அந்த நிலைப்பாட்டில் இருந்து பிரதமர் மோடி தலைமையிலான அரசும் மாறாதது உலக நாடுகளை பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

பிரகடனத்தின் முக்கிய அம்சங்கள்

* பிராந்திய ஒருமைப்பாடு, பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிடாத கொள்கைகளுக்கு மரியாதை.

* ஐ.நா.,வின் தீர்மானங்கள் அடிப்படையில் மத்திய கிழக்கில் நீடித்த அமைதி நிலவ உறுதி.

* 1967ல் வரையறுக்கப்பட்ட எல்லைகளின்படி, இறையாண்மை கொண்ட நாடாக பாலஸ்தீனத்தை உருவாக்குதல்.

* பாலஸ்தீன மக்களின் உரிமைகளை நடைமுறைப்படுத்த ஆதரவு.