ஒரு குடும்ப ஆட்சியை துாக்கி எறிய வேண்டும்; அண்ணாமலை பேச்சு
2 பங்குனி 2026 திங்கள் 13:01 | பார்வைகள் : 196
தமிழகத்தில் செயல்படும் ஒரு குடும்ப ஆட்சியை துாக்கி எறிய வேண்டும்'' என மதுரையில் நேற்று நடந்த தே.ஜ., கூட்டணி பொதுக்கூட்டத்தில் பா.ஜ., மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார்.
அவர் பேசியதாவது:
மதுரையில் இது திருப்புமுனை கூட்டமாக, தி.மு.க.,வை வீட்டுக்கு அனுப்பும் கூட்டமாக அமையும். சிறந்த ஆட்சி என்பது ஒரு கை மாநில அரசு, ஒரு கை மத்திய அரசாக இருந்து இரு கைகள் தட்ட வேண்டும். இரண்டு அரசு இணக்கமாக இருந்து வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்ல வேண்டும்.
மத்தியில் பா.ஜ., மாநிலத்தில் அ.தி.மு.க., ஆட்சியின் போது தமிழகத்திற்கு 11 மருத்துவ கல்லுாரிகளை பழனிசாமி கொடுத்தார். இதுவே இணக்கமான ஆட்சிக்கு சாட்சி. தற்போது தி.மு.க., என்றால் மக்கள் தீயசக்தி என்கின்றனர். அனைத்து தரப்பினரும் கோபத்தில் உள்ளனர். 5 ஆண்டு காலத்தில் 11 சதவீதம் வளர்ச்சி அடைந்து விட்டதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். குறிப்பாக மின்னணு துறையில் ரூ.8,800 கோடியாக இருந்த ஏற்றுமதி தற்போது ரூ.ஒரு லட்சம் கோடியை தாண்டியது.
இது மத்திய அரசின் உற்பத்தியுடன் இணைந்து ஊக்குவிக்கும் திட்டத்தால் சாத்தியம். ஆட்டோமொபைல் துறையும் அப்படி தான். தி.மு.க.,வால் மட்டுமே நடந்துள்ளது என கண்ணாமூச்சி காட்டக் கூடாது. தமிழகத்தின் 5 ஆண்டு ஆட்சியில் தி.மு.க., குடும்பம் மட்டுமே வளர்ச்சியடைந்துள்ளது. ஒரு கம்பெனி போல இயங்கும் அதில், எம்.டி.,யாக முதல்வர் ஸ்டாலின், சி.இ.ஓ.,வாக துணை முதல்வர் உதயநிதி, சீப் மார்க்கெட்டிங் ஆபீசராக கனிமொழி, இயக்குநர்களாக உறவினர்கள், சீப் செக்யூரிட்டி ஆபீசராக ஆர்.எஸ்.பாரதி என அவர்கள் மட்டுமே லாபமடைந்துள்ளனர்.
கிழக்கு இந்திய கம்பெனி எப்படி இந்தியாவில் கலெக்ஷன், கரப்பஷன், கமிஷன் ஆட்சி செய்ததோ அதே கொள்கையுடன் தற்போது தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி நடக்கிறது. ஒரு டி.என்.பி.எஸ்.சி., தேர்வை கூட நடத்த முடியாத ஆட்சியாக உள்ளது. இக்குடும்ப ஆட்சியை துாக்கி எறிய வேண்டும். தமிழகத்தில் இரண்டு கைகள் சேர்ந்து ஓசை எழுப்பும் இணக்கமான ஆட்சி ஏற்பட வேண்டும். தே.ஜ., கூட்டணி வெற்றி பெற வேண்டும். இவ்வாறு பேசினார்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan