Paristamil Navigation Paristamil advert login

கட்சி மாறியதால் காட்சியும் மாறியது; ஓபிஎஸ் வீட்டில் இரட்டை இலை அகற்றம்

கட்சி மாறியதால் காட்சியும் மாறியது; ஓபிஎஸ் வீட்டில் இரட்டை இலை அகற்றம்

1 பங்குனி 2026 ஞாயிறு 09:49 | பார்வைகள் : 180


அதிமுகவில் முதல்வர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்த ஓபிஎஸ் திமுகவில் இணைந்த உடனே காரில் ஜெயலலிதா படத்தை நீக்கினார். தற்போது அவர்  பெரிய குளத்தில் உள்ள வீட்டு கிரில் கேட்டில் இருந்த இரட்டை இலை சின்னத்தை அகற்றிய வீடியோ இணையத்தில் வெளியாகி உள்ளது.

அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் மூன்று முறை முதல்வராக பதவி வகித்த பன்னீர்செல்வம், அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தனி அணியாக செயல்பட்டு வந்தார். மீண்டும் அ.தி.மு.க.வில் சேர கடுமையாக முயற்சி செய்தார். அவரது செயல்பாடுகளால் அதிருப்தியில் இருந்த அதிமுக தலைமை, மீண்டும் அவரை கட்சியில் சேர மறுத்து விட்டது.

இந்நிலையில்,  பன்னீர் அணியில் இருந்த முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் தி.மு.க.வில் சேர்ந்தனர். பன்னீர்செல்வமும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ. அய்யப்பனும் தனித்து நின்றனர். இத்தகைய சூழ்நிலையில், தன்னுடைய கடந்த கால அரசியல் அனைத்தையும் மறந்து திமுகவில் இணைய ஓபிஎஸ் முடிவெடுத்தார்.

சில தினங்களுக்கு முன் ஸ்டாலின் ஆசி பெற்று, தோளில் கருப்பு சிவப்பு துண்டு போட்டு, உறுப்பினர் படிவத்தில் கையெழுத்து போட்டு திமுகவின் உறுப்பினர் ஆனார். இணைந்த உடனே காரில் ஜெயலலிதா படத்தை ஓபிஎஸ் நீக்கினார். அதிமுக கொடி உடனடியாக திமுக கொடியாக மாறியது. சட்டை பாக்கெட்டில் ஜெயலலிதா படம் வைப்பதை வழக்கமாகக் கொண்ட ஓபிஎஸ், கட்சி மாறியது முதல் சட்டை பாக்கெட்டில் ஸ்டாலின் படத்தை வைக்க ஆரம்பித்துள்ளார்.

திமுகவின் கருப்பு சிகப்பு கரை வேட்டிக்கும் மாறிவிட்டார். இது மட்டுமின்றி, வீட்டிலும் மாற்றங்கள் செய்து வருகிறார். பெரியகுளம் தெற்கு அக்ரஹாரத்தில்  ஓ.பன்னீர்செல்வம் வீட்டின் கேட்டில் பொருத்தப்பட்டிருந்த இரட்டை இலை சின்னம் நேற்று வெல்டிங் வைத்தது அகற்றப்பட்டது.

வீட்டின் சுவற்றில் இருந்த அ.தி.மு.க (கருப்பு - வெள்ளை - சிகப்பு) வண்ணம், தி.மு.க (கருப்பு - சிகப்பு) வண்ணமாக மாற்றம் செய்யப்பட்டது. திமுகவில் இணைந்த 2  நாட்களில் அதிமுகவில் இருந்த அடையாளங்களை ஓபிஎஸ் அழித்த சம்பவம் இணையத்தில் விமர்சனங்களை கிளப்பி உள்ளது.