Paristamil Navigation Paristamil advert login

இந்திய மண்ணிலிருந்து ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவார்கள்; அமித்ஷா உறுதி

இந்திய மண்ணிலிருந்து ஊடுருவல்காரர்கள் வெளியேற்றப்படுவார்கள்; அமித்ஷா உறுதி

27 மாசி 2026 வெள்ளி 07:21 | பார்வைகள் : 272


ஒட்டுமொத்த நாட்டையும் ஊடுருவல்காரர்களிடமிருந்து மீட்க பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதி பூண்டுள்ளதாக பீஹாரில் பாதுகாப்பு படையினர் மத்தியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

நேபாளம் மற்றும் பூட்டான் எல்லைகளைப் பாதுகாக்கும் எஸ்எஸ்பி எனும் இந்திய பாதுகாப்பு படையினர் மத்தியில் அவர் பேசியதாவது; இன்று இந்தியாவின்  சாவர்க்கரின் நினைவு நாள்.  சாவர்க்கர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடு இணையற்ற வீரராகத் திகழ்ந்தார்.

அதுமட்டுமல்லாமல், தனது இலக்கியப் படைப்புகள் மூலம் நாடு முழுவதும் தேசபக்தி வேட்கையை  உருவாக்கினார். தீண்டாமை ஒழிப்பு மற்றும் தேசியவாதம் என அனைத்திற்கும் பெரும் பங்காற்றினார். ஒட்டுமொத்த தேசத்தின் சார்பாக, சாவர்க்கருக்கு எனது மனமார்ந்த அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எல்லையின் பாதுகாவலர்களாகவும், கலாசாரத்தின் தூதுவர்களாகவும் பணியாற்றி வரும் சாஸ்த்ர சீமா பல் வீரர்களுடன் இருக்கும் இன்றைய நாள் எனக்கு மிகவும் மகிழ்ச்சியான நாள். இந்தப் பிராந்தியம் முழுவதும் சுமார் 170 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய கட்டடங்கள் மற்றும் வசதிகள் இன்று திறந்து வைக்கப்பட்டு உள்ளன. இந்தக் கட்டடங்கள் உங்கள் பணியின் போது எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்க நிச்சயமாக உதவும் என்பதில் நான் மகிழ்ச்சியும், நம்பிக்கையும் கொள்கிறேன்.

ஊடுருவல்காரர்களை நீக்குவது என்பது வாக்காளர் பட்டியலிலிருந்து அவர்களின் பெயர்களை நீக்குவது மட்டுமல்ல. இந்திய மண்ணிலிருந்து ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் வெளியேற்றுவதற்கான திட்டத்தைச் செயல்படுத்த நாங்கள் உறுதியாக உள்ளோம். ஒட்டுமொத்த நாட்டையும் ஊடுருவல்காரர்களிடமிருந்து விடுவிக்க  மோடி அரசு உறுதி பூண்டுள்ளது.

பீஹாரில் நேபாளம் மற்றும் வங்கதேச எல்லையை ஒட்டியுள்ள இந்தப் பகுதியில் ஊடுருவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.நம் தேச விரோத சக்திகள் அண்டை நாடுகளைப் பயன்படுத்தி இந்தியாவிற்குள் நுழைய முயல்வார்கள். எனவே, எல்லைப் பாதுகாப்புப் படையினர் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.