Paristamil Navigation Paristamil advert login

சமூகத்தை ஒன்றிணைப்பதற்கு இன்றியமையாதது: பொது சிவில் சட்டத்துக்கு மோகன் பாகவத் ஆதரவு

சமூகத்தை ஒன்றிணைப்பதற்கு இன்றியமையாதது: பொது சிவில் சட்டத்துக்கு மோகன் பாகவத் ஆதரவு

25 மாசி 2026 புதன் 12:04 | பார்வைகள் : 170


உத்தராகண்டில் உள்ளதைப் போலவே நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை (யுசிசி) அமல்படுத்த வேண்டும். இது சமூகத்தை ஒன்றிணைப்பதற்கு அவசியம் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வலியுறுத்தியுள்ளார்.

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் 100வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் முன்னாள் வீரர்களுடன் கலந்துரையாடிய போது மோகன் பாகவத் கூறியதாவது: பொது சிவில் சட்டம் (யு.சி.சி) செயல்படுத்தப்பட்டால் அது மிகவும் நல்ல விஷயமாக இருக்கும். அது நாடு முழுவதும் நடந்தால் நல்லது. உத்தராகண்டில் உள்ளதைப் போலவே நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை (யுசிசி) அமல்படுத்த வேண்டும். இது சமூகத்தை ஒன்றிணைப்பதற்கு அவசியம்.

உத்தராகண்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கு முன்பாக, விவாதங்கள் நடத்தப்பட்டது. 3 லட்சம் மக்களிடமிருந்து பரிந்துரைகளை பெற்று அவை அனைத்தும் ஆராயப்பட்டன. இவ்வாறு மோகன் பாகவத் கூறினார்.

அதேநேரத்தில், உயர்கல்வி நிறுவனங்களில் ஜாதி அடிப்படையிலான பாகுபாட்டைக் கட்டுப்படுத்தும் நோக்கில் யுஜிசி விதிமுறைகளை சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது குறித்து மோகன் பாகவத் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். அவர் இந்த விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்றார்.

உத்தராகண்ட் மாநிலத்தில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், பொது சிவில் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என, 2022 சட்டசபை தேர்தலின் போதே, பா.ஜ., வாக்குறுதி அளித்து இருந்தது. அதன்படி, கடந்த 2025ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்