Paristamil Navigation Paristamil advert login

இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு - போலி வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் முற்றுகை

இலங்கையர்களுக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு - போலி வேலைவாய்ப்பு முகவர் நிலையங்கள் முற்றுகை

20 மாசி 2026 வெள்ளி 15:54 | பார்வைகள் : 199


விசா ஆலோசனை வழங்குவதாகக் கூறி போலி வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையங்களை நடத்தி வந்த மூவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பல பகுதிகளில் வைத்து கைது செய்துள்ளது.

பணியகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போதே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜா-எல, கந்தானை பகுதியில் ருமேனியாவில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி நபரிடமிருந்து 36 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்ததாக பணியகத்திற்கு இரண்டு முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

அதன்படி, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினால் குறித்த நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வெலிசறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த மோசடிக்கு உதவிய மற்றுமொரு பெண்ணும் பணியகத்திற்கு அழைக்கப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, நீர்கொழும்பு பகுதியில் சமூக வலைத்தளங்கள் ஊடாக ஐரோப்பிய நாடுகளில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி நபரிடமிருந்து 55 இலட்சம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டு, வாக்குறுதி அளித்தபடி வேலையை வழங்கவில்லை என பணியகத்திற்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.

அதன்படி மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது நிறுவனத்தின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அங்கிருந்த வேலை ஒப்பந்தங்கள் மற்றும் கடவுச்சீட்டு ஒன்றும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்