Paristamil Navigation Paristamil advert login

ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரசுக்கு உரிமை உள்ளது; சொல்கிறார் திருமாவளவன்

ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரசுக்கு உரிமை உள்ளது; சொல்கிறார் திருமாவளவன்

18 மாசி 2026 புதன் 10:27 | பார்வைகள் : 165


தமிழகத்தில் ஆட்சியில் பங்கு கேட்க காங்கிரசுக்கு உரிமை உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

சென்னையில் அவர் அளித்த பேட்டி:

ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. அந்த நோக்கத்தின் அடிப்படையில் கோரிக்கைகளை (ஆட்சியில் பங்கு கேட்கும் காங்கிரசை குறிப்பிடுகிறார்) வைப்பது இயல்பானதுதான். விடுதலை சிறுத்தைகள் தேர்தல் அரசியலில் அடியெடுத்து வைத்த காலத்தில் முன் வைக்கிற முக்கியமான கோரிக்கைகளில் இதுவும் ஒன்றுதான்.

ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பது அதிகாரப் பரவலாக்கத்தை வலியுறுத்துகிற ஒரு கோரிக்கை. 1999ல் இருந்து நாங்கள் இதை பேசி வருகிறோம். 2016 வாக்கில் தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்கிற கருத்தரங்கை அனைத்து கட்சிகளின் தலைவர்களை அழைத்து நடத்தி இருக்கிறோம்.

ஆனால் இதை சாத்தியப்படுத்துவதற்கான சூழல் தமிழகத்தில் கனிந்திருக்கிறதா என்றால் இன்னும் கனியவில்லை என்று அனுபவபூர்வமாக நாங்கள் உணர்ந்திருக்கிறோம். அதிலும் இந்த தேர்தல் நடைபெற உள்ள சூழலில், வலதுசாரிகளின் கைகள் ஓங்கிவிடக்கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம்.

அதாவது இப்படிப்பட்ட கோரிக்கையை எழுப்புவதன் மூலம், கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டு பலவீனத்தை ஏற்படுத்தி விடக்கூடாது, அதன் மூலம் வலதுசாரிகளுக்கு ஒரு வாய்ப்பை வழங்கி விடக் கூடாது என்பதிலும் கவனமாக இருக்கிறோம். ஆகவே நாங்கள் இந்த தருணத்தில் இந்த கோரிக்கைக்கு (கூட்டணி ஆட்சி) அழுத்தம் கொடுக்கவில்லை. ஆனால், அந்த கோரிக்கையை நாங்கள் கைவிட்டு விடவில்லை.

காங்கிரஸ் இப்படி ஒரு கோரிக்கை முன் வைக்கிறது என்றால், காங்கிரசுக்கு அந்த உரிமை இருக்கிறது. அது கட்சிக்குள்ளோ, கூட்டணிக்குள்ளோ பேசி தீர்க்கப்படும். முதல்வர் இது குறித்த விளக்கத்தை ஏற்கனவே தந்திருக்கிறார். தமிழக அரசியல் சூழலுக்கு அது பொருந்தாது என்று சொல்லி இருக்கிறார்.

பொருந்தாது என்பதினால் காங்கிரஸ் அந்த கோரிக்கையை மறுபடியும் எழுப்பக்கூடாது என்று இல்லை. அப்படி எழுப்புவதனால் கூட்டணி சிதறிவிடும் என்று பலரும் எதிர்பார்க்கிறார்கள். காங்கிரஸ் திமுக கூட்டணியில் நீடிக்கும் என்று நான் நம்புகிறேன்.  பேச்சுவார்த்தையில் சுமுகமாக இதை தீர்ப்பார்கள்.

இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்