Paristamil Navigation Paristamil advert login

உலகின் முதல் மூன்று ஏஐ வல்லரசுகளில் ஒன்றாக இந்தியா : பிரதமர் மோடி உறுதி

உலகின் முதல் மூன்று ஏஐ வல்லரசுகளில் ஒன்றாக இந்தியா : பிரதமர் மோடி உறுதி

18 மாசி 2026 புதன் 06:03 | பார்வைகள் : 169


உலகின்  முதல் மூன்று ஏஐ வல்லரசுகளில் ஒன்றாக இந்தியா இருக்க வேண்டும்,'' என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பிரதமர்மோடி அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

இன்று ஏஐ என்பது (செயற்கை நுண்ணறிவு) முக்கிய காலகட்டத்தில் நிற்கிறது. இது, முன் எப்போதும் இல்லாத வகையில் மனிதர்களின் திறனை அதிகரிக்கும்.

வளர்ச்சி

2047ல் வளர்ந்த பாரதம்  என்ற இந்தியாவின் பயணத்தில் ஏஐ ஒரு மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். ராஜதந்திர ரீதியில் ஏஐயை பயன்படுத்துவது என்பது கடினமான சவால்களை எதிர்கொள்ள உதவுகிறது. அதேநேரத்தில்  முற்றிலும் புதிய பொருளாதார  வாய்ப்புகளை உருவாக்குகிறது. அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஏற்படுத்துகிறது. நகர்ப்புறங்களையும்  கிராமப்புறங்களையும் இணைக்கிறது.  

சுகாதாரத்தறையில் ஏஐ பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆரம்ப சுகாதார மையங்கள்  மற்றும் மாவட்ட மருத்துவமனைகளில் காசநோய், நீரிழிவு உள்ளிட்ட நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய ஏஐ உதவுகிறது.

கல்வித்துறையில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும்  மாணவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கிறது.

விவசாயத்துறையிலும்,   பாரத் விஸ்தார் திட்டம் மூலம், பயிர்கள் குறித்த ஆலோசனை, மண் பரிசோதனை மற்றும்  வானிலை தகவல்களை ஏஐ ஒருங்கிணைக்கிறது. இது விவசாயிகள் சிறந்த முடிவுகளை எடுக்க உதவுகிறது.

மகத்தான வாய்ப்பு

பாரம்பரியங்களை பாதுகாப்பதிலும் இந்தியாவின்  பண்டைய கால  நாகரிகத்தை அறியவும்  ஏஐ  புதிய வாய்ப்பாக அமைந்துள்ளது. பழங்கால கட்டுரைகளை டிஜிட்டல் மயமாக்கலுக்கும் அதன் விளக்கத்தை தெரிந்து கொள்வதற்கும் மகத்தான வாய்ப்பாக அமைந்துள்ளது.

ஏஐ குறித்து உலகம் கவலைப்படும் நேரத்தில் , அதன் மூலம் பிரச்னையை தீர்க்க இந்தியா பயன்படுத்துகிறது.  சுகாதாரம், கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகளை ஒவ்வொரு கிராமம் மாவட்டம் மற்றும் ஒவ்வொரு குடிமக்களுக்கும்  கொண்டு செல்ல ஏஐ தொழில்நுட்பத்தை சிறந்த கருவியாக பயன்படுத்துகிறோம்.

இந்தியாவின் டிஜிட்டல் கட்டமைப்பானது வளரும் நாடுகளுக்கு  முக்கியமானது. புதிய வாய்ப்புகளை வழங்குகிறது. ஆதார், யுபிஐ உள்ளிட்ட  டிஜிட்டல்  அமைப்புகளின் வெற்றி சாதாரணமானது அல்ல.

ஏஐயின் அதிகார மையமாக மாறுவதற்கான ஆற்றலும் திறமையும்    இந்தியாவிடம் உண்டு. விவசாயிகள், சிறுகுறு தொழில் முனைவோர். பெண் தொழில்முனைவோருக்காக ஏஐ தீர்வுகளை நமது இளைஞர்கள் உருவாக்குவார்கள்.

ஏஐயில் நமது இளைஞர்களை  ஆற்றல் மிக்கவர்களாக  மாற்றுவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து வருகிறோம்.  மத்திய பட்ஜெட்டில் இதற்கான கொள்கைகள் உள்ளன. டேட்டா மையங்கள் மற்றும் கிளவுட் உள்கட்டமைப்புக்கு ஆதரவு அளிக்கிறது.

நமது சேவை ஏற்றுமதிக்கும் முதுகெலும்பு ஆகவும், பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய ஊக்கியாகவும் ஐடி துறை உள்ளது. தற்போது,  பெரிய வாய்ப்புகளும் சவால்களும் இந்த துறைக்கு உள்ளன. 2030ல் இந்திய ஐடி துறை 400 பில்லியன் டாலரை எட்டும்  என்ற கணிப்பு உள்ளது.  ஐடி துறைக்கு மாற்றாக  ஏஐ வரவில்லை.  அதில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

தொழில்நுட்பம் என்பது மகத்தான ஆயுதம். இதனை நல்ல விஷயத்துக்காக பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.  மனிதர்களின் ஆற்றலை ஏஐ மேம்படுத்தினாலும், முடிவு எடுப்பதற்கான பொறுப்பு மனிதர்களிடமே இருக்க வேண்டும்.  ஏஐ எப்படி பயன்படுத்துவது மற்றும் நிர்வகிப்பது என்பது குறித்து உலகளவில்  விவாதிக்கப்பட்டு வருகிறது.

தன்னிறைவு இந்தியாவை நோக்கிய  பயணம் என்பது சில அடிப்படை கொள்கைளால்  கட்டமைக்கப்பட்டு உள்ளது. இந்தியா என்பது, தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நுகர்வோர் ஆக இல்லாமல், அதை உருவாக்குபவராக  இருக்க வேண்டும்.

இறையாண்மை, புதுமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய என்ற 3  கொள்கைகள் அடிப்படையில் ஏஐ யில் இந்தியா தன்னிறைவு பெற வேண்டும் என்பதே எனது கொள்கை. ஏஐ நுகர்வில் மட்டும் அல்லாமல்,  படைப்பிலும் இந்தியா உலகளவில் முதல் மூன்று ஏஐ வல்லரசுகளில் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்