Paristamil Navigation Paristamil advert login

இந்தியாவின் கரம் வலுவடைந்து வருகிறது; சர்வதேச ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவின் கரம் வலுவடைந்து வருகிறது; சர்வதேச ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மோடி பெருமிதம்

16 மாசி 2026 திங்கள் 12:28 | பார்வைகள் : 184


நாட்டின் வளர்ந்து வரும் உற்பத்தி திறன், விரிவடைந்த சேவைத் துறை மற்றும் ஏராளமான குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் காரணமாக, வலுவான நிலையில் இருந்து பிற நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களை பேசி முடிக்கிறோம்,'' என பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பி.டி.ஐ., செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:

நாங்கள் சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட், எங்கள் ஆட்சி பாணியை பிரதிபலிக்கிறது. உற்பத்தி திறனை மேம்படுத்த செலவிடுவதே எங்கள் அடையாளம். வரும் நிதியாண்டில் மூலதன செலவினங்களுக்கு 12.2 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளோம். இது 2013-ஐ விட 5 மடங்கு அதிகம்.  

குறுகிய கால பிரபலத்துக்கு திட்டங்களை அறிவிப்பதற்கு பதிலாக உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு, நீடித்த வளர்ச்சிக்கான முதலீடுகளை ஊக்குவிக்கிறோம். கடந்த 2014 முதல் பட்ஜெட் என்பது வெறும் எண்கள் மட்டும் இல்லை என்பதை சொல்லி வருகிறோம். ஒரு நோக்கம், அதை அடைவதற்கான வழிமுறை, காலக்கெடு என்ற முறையில் திட்டங்கள் வகுக்கிறோம்.

பழைய அரசுகள் விட்டுச் சென்ற குறைகளை களைந்தோம்; தைரியமாக சீர்திருத்தங்கள் செய்தோம். ஏழைகளுக்கு வாய்ப்பு, இளைஞர்களுக்கு அதிகாரம், பெண்களுக்கு வலிமை, விவசாயிகளுக்கு கவுரவத்தை வழங்கியுள்ளோம். இந்த பட்ஜெட், சீர் திருத்த எக்ஸ்பிரசை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கிறது. வளர்ந்த நாடு என்ற கனவை பிரதிபலிக்கிறது. '2047 விக்ஷித் பாரத்' எனப்படும் வளர்ந்த பாரதத்துக்கான அடித்தளம்.

நம் நாடு தற்போது வர்த்தக ஒப்பந்தங்களை முடிக்க, வலுவான நிலையில் இருந்து பேச்சு நடத்துகிறது. ஏனெனில், நம் உற்பத்தித் திறன், சேவைத் துறை மற்றும் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் வளர்ந்து வருகின்றன. இது நமக்கு 38 நாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை முடிக்க உதவியுள்ளது.  இந்த ஒப்பந்தங்கள் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான சந்தை வாய்ப்பை விரிவாக்கும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக துணி, தோல், ரசாயனம், கைவினைப்பொருட்கள், நகை துறைகளில் நம்  ஏற்றுமதியாளர்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும். அரசியல் நிலைத்தன்மை இந்தியா மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மீட்டெடுத்து உள்ளன. முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பேச்சுகள் துவங்கி, பின் முறிந்துவிடும்.

சமீபத்திய ஆண்டுகளில், நம் உற்பத்தி பொருட்களின் ஏற்றுமதி அளவு முந்தைய சாதனைகளை திரும்பத் திரும்ப முறியடித்துள்ளது. நம் அதிகரித்த போட்டித்திறனையும் உலக சந்தைகளுடனான ஒருங்கிணைப்பையும் இது காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்