Paristamil Navigation Paristamil advert login

ராணுவ வலிமையால் மோதல்களை தீர்க்க முடியாது: மோகன் பாகவத்

ராணுவ வலிமையால் மோதல்களை தீர்க்க முடியாது: மோகன் பாகவத்

23 தை 2026 வெள்ளி 13:57 | பார்வைகள் : 2285


உலகளாவிய மோதல்கள் மற்றும் சமூக முரண்பாடுகளை தொழில்நுட்பம், ராணுவ வலிமையால் மட்டும் தீர்க்க முடியாது., என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.ராஜஸ்தான் மாநிலம், தித்வானா பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

உலகத்துக்கு கண்ணியத்தை கற்றுக் கொடுக்க வேண்டியது இந்தியாவின் கடமை. இதை சொற்பொழிவுகள் மூலமோ அல்லது புத்தகங்கள் மூலமோ அல்லாமல் நடத்தை மூலம் அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும். புத்தகங்களில் அறிவு இருக்கிறது. சொற்பொழிவுகளை மக்கள் கேட்கின்றனர். ஆனால், இந்த செயல்முறையை முழுமையாக்குவதில்லை. ஒருவர் தன்னை எப்படி நடத்திக் கொள்ள வேண்டும். ஒருவர் எப்படி இருக்கவேண்டும் என்பது நித்தியமானது. இது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை கூறப்பட்டது. இது வரும் காலங்களிலும் தொடரும். ஆனால், ஆயிரம் ஆண்டுக்கு முன்பு நிலைமை வேறுவிதமாக இருந்தது. இன்று நிலைமை வேறுவிதமாக இருக்கிறது. இந்தியாவின் நாகரிக மரபில் உண்மையும் ஒரு வாழ்க்கை முறையாகும். இது இந்திய நெறிமுறைகளை உலகளவில் தனித்துவமாக்குகிறது.

தற்போதைய உலகளாவிய மோதல்கள் மற்றும் சமூக முரண்பாடுகளை தொழில்நுட்பம், மூலதனம் அல்லது ராணுவ வலிமையால் மட்டும் தீர்க்க முடியாது. உலகிற்கு தேவைப்படுவது நீதியின் கட்டுப்பாடுகளுக்குள் மனித நடத்தையை வழிநடத்தும் ஒரு தார்மிக திசைகாட்டி. இந்தியா இந்த தொலைநோக்குப் பார்வையை உள்ளடக்கியது. மக்கள் செயல்களால் ஈர்க்கப்படுகிறார்கள். எனவே ஒழுக்கமான, ஆன்மிக வாழ்க்கையை நடத்துபவர்கள் இந்திய சமூகத்தில் முன்மாதிரிகளாக மதிக்கப்படுகிறார்கள்.

இந்திய பாரம்பரியம் சகவாழ்வு மற்றும் சமநிலையை ஆதரிக்கிறது. இயற்கை உடனான மோதலுக்கு பதிலாக நல்லிணக்கம் ஒரு நிலையான தீர்வை வழங்குகிறது.இது இப்போதும் மிகவும் பொருத்தமானதாக உள்ளது. இந்திய தத்துவங்களில் செல்வம் என்பது இலக்காக அல்லாமல் ஒரு வழிமுறையாக செயல்படுகிறது. இவ்வாறு மோகன் பாகவத் பேசினார்.