Paristamil Navigation Paristamil advert login

இன்று மாலைக்குள் புயல் வலுவிழக்கும்: கோடியக்கரையில் இடைவிடாத மழை

இன்று மாலைக்குள் புயல் வலுவிழக்கும்: கோடியக்கரையில் இடைவிடாத மழை

30 கார்த்திகை 2025 ஞாயிறு 09:14 | பார்வைகள் : 1276


வங்கக்கடலில் நிலவி வரும் டிட்வா புயல் இன்று மாலை 5.30 மணிக்குள் வலுவிழக்க வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோடியக்கரையில் 250 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

தமிழகத்தின் வட மாவட்டங்களை நெருங்கும் 'டிட்வா' புயல், இன்று மாலையில் வலுவிழக்கத் துவங்கும் என்றும், கரையை கடக்க வாய்ப்பு இல்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது சென்னைக்கு 220 கிலோ மீட்டரிலும், புதுச்சேரிக்கு 130 கிலோ மீட்டரிலும், வேதாரண்யத்திற்கு 120 கிலோ மீட்டர் தொலைவிலும் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது.

டிட்வா புயல் மணிக்கு 7 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இன்று மாலை வட தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதியில் இருந்து 30 கி.மீ தொலைவில் புயல் நிலவக்கூடும். டிட்வா புயல் இன்று மாலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்புள்ளது.

இதன் காரணமாக, திருவள்ளூர், ராணிப்பேட்டையில் இன்று கனமழை முதல் மிக கனமழையும், ஒரு சில இடங்களில் அதிகனமழையும் பெய்யும் என்பதால், ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்துள்ளது. பல்வேறு பகுதிகளில் இன்று காலை 6 மணி வரை பதிவான மழைப்பொழிவு மில்லி மீட்டரில்,

கோடியக்கரை 250

வேளாங்கண்ணி 133

திருவாரூர் 137

நன்னிலம் 123

திருத்துறைப்பூண்டி 113

நீடாமங்கலம் 93

வலங்கைமான் 89

குடவாசல் 74

முத்துப்பேட்டை 70

தங்கச்சிமடம் 134

தொண்டி 127

திருவாடானை 104

தீர்த்தாண்ட தானம் 104

பாம்பன் 99

ராமேஸ்வரம் 91

மண்டபம் 83

மயிலாடுதுறை 143

மணல்மேடு 94

சீர்காழி 137

கொள்ளிடம் 93

செம்பனார்கோவில் 172

மிதமான மழைக்கு வாய்ப்பு

அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கோவை, கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், திருவள்ளூர், திருவாரூர், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், ராணிப்பேட்டை, தஞ்சை, நீலகிரி ஆகிய 18 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தடை

டிட்வா புயல் சென்னையை நோக்கி நகர்ந்து வரும் நிலையில் மெரினா கடற்கரைக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

வாலிபர் பலி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா செம்பதனிருப்பு வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜா மகன் பிரதாப்,19. புயல் காரணமாக கொட்டி தீர்க்கும் கனமழையால், சேதம் அடைந்த மின் கம்பியில் இருந்து மின்சாரம் தாக்கியதில் பிரதாப் உயிரிழந்தார்.

போக்குவரத்து பாதிப்பு

ஆலங்குடி அருகே உள்ள மாங்கோட்டையில் சாலையில் பழமையான ஆலமரம் விழுந்தது. இதனால் இரவு முதல் தற்போது வரை போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

5ம் எண் கூண்டு

கடலூர், நாகை, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் ஐந்தாம் எண் புயல் எச்சரிக்கை (அபாயம்) கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.

வீடு இடிந்து பெண் பலி

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே ஆலமன்குறிச்சி பகுதியை சேர்ந்த முத்துவேல் என்பவருக்கு சொந்தமான ஓட்டு வீடு சுவர் இடிந்து, அவருக்கு சொந்தமான மற்றொரு வீட்டின் மீது விழுந்தது.

இதில், முத்துவேல் மகள் ரேணுகா, 20, இறந்தார். மேலும் முத்துவேல், அவரது மனைவி சீதா, மற்றொரு மகள் கனிமொழி மூவரும் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

4 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

திரு. பொன்னையா தனேஸ்வரன்

வயது : -

இறப்பு : 28 Feb 2026