Paristamil Navigation Paristamil advert login

2 கோடி ஆதார் எண்கள் நீக்கம்: நிதி மோசடியை தடுக்க ஆணையம் நடவடிக்கை

2 கோடி ஆதார் எண்கள் நீக்கம்: நிதி மோசடியை தடுக்க ஆணையம் நடவடிக்கை

27 கார்த்திகை 2025 வியாழன் 10:30 | பார்வைகள் : 100


உயிரிழந்த 2 கோடி பேரின் ஆதார் எண்கள் நீக்கப்பட்டு உள்ளதாகவும், இறந்தவர் பெயரில் நடக்கும் நிதிமோசடியை தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: நாடு முழுவதும் உயிரிழந்த 2 கோடி பேரின் ஆதார் எண்கள் நீக்கப்பட்டுள்ளன. ஆதார் தகவல்களை துல்லியமாக வைத்திருக் நாடு முழுவதும் மேற்கொண்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக இறந்தவர்களின் தகவல்கள், இந்திய பதிவாளர் ஆணையம், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள், பொது விநியோக திட்டம், தேசிய சமூக உதவித்திட்டம் உள்ளிட்டவற்றில் இருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளன. இறந்தவர்களின் தகவல்களை பெறுவதற்கு, நிதி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறோம். இறந்தவர்களின் ஆதார் எண்கள் வேறு நபர்களுக்கு ஒதுக்கப்பட மாட்டாது. இறந்தவரின் பெயரில் நிதிமோசடி நடைபெறாமல் தடுக்கவும், நலத்திட்டங்களில் ஆதார் எண் தவறாக பயன்படுத்தாமல் இருப்பக்கவும், அவரின் ஆதார் எண் முடக்கப்பட வேண்டியது கட்டாயம்.

நாடு முழுவதும் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், இறந்தவர்கள் குறித்த தகவல்களை பதிவு செய்வதற்காக இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களில் இந்த வசதியை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இறந்தவரின் இறப்பு சான்றிதழ் பெற்ற பிறகு, குடும்ப உறுப்பினர்கள், அவர்களின் தகவல்களை பதிவு செய்து ஆதார் எண்ணை முடக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்