Paristamil Navigation Paristamil advert login

மருத்துவ கல்லூரி வழக்கில் பழனிசாமிக்கு எதிராக ஆதாரம் இல்லை: தமிழக அரசு

மருத்துவ கல்லூரி வழக்கில் பழனிசாமிக்கு எதிராக ஆதாரம் இல்லை: தமிழக அரசு

17 மார்கழி 2025 புதன் 11:56 | பார்வைகள் : 145


தமிழகத்தில், முந்தைய அ.தி.மு.க., ஆட்சியில், 11 மருத்துவ கல்லுாரிகளுக்கான கட்டுமானத்தில் முறைகேடு நடந்ததாக, முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிராக கூறப்படும் புகாரில் ஆதாரம் இல்லை. அதனால், அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தெரிவித்துள்ளது.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த என்.ராஜசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:

11 மருத்துவ கல்லுாரிகள்

முந்தைய அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், திருவள்ளூர், அரியலுார், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நாகப்பட்டினம், திருப்பூர், கிருஷ்ணகிரி மற்றும் நீலகிரி ஆகிய 11 மாவட்டங்களில் மருத்துவ கல்லுாரிகள் கட்டப்பட்டன.

பழனிசாமி முதல்வராக இருந்தபோது, அவரது வசம் பொதுப்பணித் துறை இருந்த காலத்தில், மத்திய அரசின் 60 சதவீதம், மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் மருத்துவ கல்லுாரிகள் கட்டப்பட்டன.

இந்த கல்லுாரிகள், தேசிய மருத்துவ ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு கட்டப்படவில்லை. மருத்துவ கல்லுாரி களுக்கான கட்டடங்கள் கட்டியதில் முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த முறைகேட்டில், அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் ஈடுபட்டு உள்ளதால், சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

அரசாணை

சி.பி.ஐ., உள்ளிட்ட மத்திய புலன் விசாரணை அமைப்புகள் விசாரணை செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும்பப் பெற்று, தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. எனவே, இந்த அரசாணையை ரத்து செய்து, நான் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்

பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என, சி.பி.ஐ.,க்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் வாதாடியதாவது:

மனுதாரரின் புகார் குறித்து, லஞ்ச ஒழிப்புத் துறை விரிவான விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில், புகாரில் ஆதாரம் இல்லை என தெரியவந்தது. அந்த விசாரணை அறிக்கை, விஜிலென்ஸ் கமிஷனரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அவரும் அந்த அறிக்கையை மாநில அரசுக்கு சமர்ப்பித்தார். மாநில அரசும், அந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு, முன்னாள் முதல்வர் பழனிசாமிக்கு எதிரான நடவடிக்கைகளை கைவிட்டு விட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து நீதிபதிகள், 'முகாந்திரம் இல்லை என புகார் முடித்து வைக்கப்பட்டதை நீதித்துறை ஆய்வுக்கு உட்படுத்த முடியுமா என்பது குறித்து, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டி மனுதாரர் விளக்கம் அளிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.

அடுத்த விசாரணையை, ஜன., 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்