Paristamil Navigation Paristamil advert login

இனி தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக ஒலிக்கப்படாது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி

இனி தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக ஒலிக்கப்படாது: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உறுதி

11 வைகாசி 2026 திங்கள் 10:38 | பார்வைகள் : 1298


அரசு நிகழ்ச்சிகளில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் மூன்றாவதாக ஒலிக்கப்படும் நடைமுறை, இனி பின்பற்றப்படாது, என, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு நுாற்றாண்டு கடந்த வரலாற்றுப் பெருமிதம் உள்ளது. இந்தப் பாடல் உலகெங்கும் பரவ வேண்டும் என்ற லட்சியத்தின் தொடர்ச்சியாகவே, தமிழக அரசு மாநிலப் பாடலாக அதை அறிவித்தது. தமிழகத்தில் நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில், முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து ஒலிக்கப்படும். நிகழ்ச்சியின் இறுதியில், தேசிய கீதம் இசைக்கப்படும். அதுதான் வழக்கமான நடைமுறை.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில், தமிழகத்தில் அமைந்திருக்கும் புதிய அரசுக்கும், வழக்கமாக உள்ள நடைமுறையில் எந்தவிதமான மாற்றுக்கருத்தும் இல்லை.

இப்படியான சூழலில், தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேக்கர் தலைமையில் நடந்த, முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில், முதலில் வந்தே மாதரம், பின் தேசிய கீதம், மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது.

இந்த புதிய நடைமுறை, தமிழகத்திற்கு ஒவ்வாதது. தமிழகத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல், மூன்றாவதாக இசைக்கப்படுவதில், த.வெ.க., தலைமையில் அமைந்துள்ள தமிழக அரசுக்கு உடன்பாடில்லை.

இதுபற்றி கவர்னர் தரப்பில் வலியுறுத்தியபோது, மத்திய அரசின் புதிய சுற்றறிக்கையின்படி, செயல்பட வேண்டிய பொறுப்பு, கவர்னருக்கு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதையொட்டி, தவிர்க்க முடியாத சூழலில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல், மூன்றாவதாக ஒலிக்கப்பட்டது.

ஆனால், இனி வரும் காலங்களில், இந்த புதிய நடைமுறை பின்பற்றப்படாது. இதற்கு முன்பிருந்த நடைமுறைப்படியே, நிகழ்ச்சி தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் இசைக்கப்படும்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.