Paristamil Navigation Paristamil advert login

விஜயை சந்தித்ததால் தி.மு.க., கூட்டணியில் குழப்பம் இல்லை: பிரவீன் சக்கரவர்த்தி

விஜயை சந்தித்ததால் தி.மு.க., கூட்டணியில் குழப்பம் இல்லை: பிரவீன் சக்கரவர்த்தி

10 மார்கழி 2025 புதன் 13:15 | பார்வைகள் : 102


த.வெ.க., தலைவர் விஜயை சந்தித்ததில் எந்த தவறும் இல்லை; தி.மு.க., கூட்டணியிலும் குழப்பம் இல்லை என, காங்கிரஸ் கட்சியின் தரவு பகுப்பாய்வு பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச, காங்கிரசில் ஐவர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. அக்குழுவினரும், சென்னையில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, தொகுதி பங்கீடு குறித்து பேசியுள்ளனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி, த.வெ.க., தலைவர் விஜயை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, காங்கிரஸ் விரும்பும் 135 தொகுதிகள் பட்டியலை கொடுத்து, 75 சீட் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பு, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க.,வுடன் குழு அமைத்து தொகுதி பங்கீடு குறித்து பேசத் துவங்கி இருக்கும் நிலையில், தி.மு.க.,வுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருக்கும் விஜயை பிரவீன் சக்கரவர்த்தி எப்படி சந்திக்கலாம் என, காங்கிரசில் இருக்கும் தி.மு.க., ஆதரவு தலைவர்கள் கொந்தளித்தனர்.

பிரவீன் சக்கரவர்த்தி மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குரல் எழுப்பி, அதை வலியுறுத்தி கட்சித் தலைமைக்கு கடிதமும் எழுதினர். இதையடுத்து, பிரவீன் சக்கரவர்த்தி நெருக்கடிக்கு ஆளாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக அவர், ஆங்கில இணையதள ஊடகம் ஒன்றுக்கு, அளித்த பேட்டி:எல்லா சந்திப்புகளுக்கும் பின்னணியில், ஒரு அரசியல் திட்டம் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

இட்லி, வடை, தோசை சாப்பிடுவது போன்ற சாதாரண சந்திப்பாகவோ அல்லது திரைப்படங்கள் குறித்து பேசுவதற்கான சந்திப்பாகவோ கூட, விஜயை நான் சந்தித்திருக்கலாம். விஜயை சந்தித்ததில் எந்த தவறும் எனக்குத் தெரியவில்லை. அதேநேரம், த.வெ.க.,வில் இணையும் எண்ணமும் எனக்கு இல்லை. விஜயை சந்தித்ததால், தி.மு.க., கூட்டணியில் எந்தக் குழப்பமும் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்