யுவராஜ் சிங் - ராபின் உத்தப்பாவுக்கு ED சம்மன் - ஆன்லைன் சூதாட்ட குற்றச்சாட்டின் கீழ் விசாரணை

17 புரட்டாசி 2025 புதன் 12:05 | பார்வைகள் : 112
ஆன்லைன் சூதாட்ட விவகாரத்தில் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் ராபின் உத்தப்பா-வுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி வைத்துள்ளது.
சட்டவிரோத ஆன்லைன் சூதாட்ட செயலி உடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் யுவராஜ் சிங் மற்றும் ராபின் உத்தப்பா-வுக்கு அமலாக்கத்துறை(ED) சம்மன் அனுப்பி வைத்துள்ளது.
1xBet என்ற ஆன்லைன் சூதாட்ட செயலியுடன் தொடர்புடைய சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மற்றும் இந்திய சட்ட மீறல் ஆகியவற்றின் கீழ் யுவராஜ் சிங் - ராபின் உத்தப்பாவை விசாரிக்க அமலாக்கத்துறை முடிவெடுத்து இந்த சம்மனை அனுப்பி வைத்துள்ளது.
அனுப்பப்பட்ட சம்மனின் அடிப்படையில், யுவராஜ் சிங் செப்டம்பர் 23ம் திகதியும், ராபின் உத்தப்பா செப்டம்பர் 22ம் திகதியும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே வழக்கில் இதற்கு முன்பு இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகிய இருவரும் அமலாக்கத்துறையினரால் விசாரிக்கப்பட்டனர்.
கிரிக்கெட் வீரர்கள் மட்டுமின்றி வேறு துறை பிரபலங்களும், பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா மற்றும் பெங்காலி நடிகர் அன்குஷ் ஹஸ்ரா ஆகிய திரை பிரபலங்களுக்கு ED சம்மன் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.