Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவின் வரி விதிப்பால் 25,000 கோடி ரூபாய் இழப்பு

அமெரிக்காவின் வரி விதிப்பால் 25,000 கோடி ரூபாய் இழப்பு

16 புரட்டாசி 2025 செவ்வாய் 07:49 | பார்வைகள் : 2212


அமெரிக்காவின் வரி விதிப்பால், ஆந்திராவில் இறால் ஏற்றுமதியில், 25,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என, அம்மாநில முதல்வர் சந்திர பாபு நாயுடு கவலை தெரிவித்துள்ளார்.

மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள தெலுங்கு தேசம் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல், மத்திய மீன்வளத் துறை அமைச்சர் ராஜிவ் ரஞ்சன் ஆகியோருக்கு தனித்தனியாக கடிதம் எழுதி உள்ளார்.

அதில், 'நாட்டின் இறால் ஏற்றுமதியில் 80 சதவீதத்தையும், கடல்சார் ஏற்றுமதியில் 34 சதவீதத்தையும் ஆந்திரா கொண்டுள்ளது. தற்போது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ளதால், மாநிலத்தின் இறால் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

'மேலும், 50 சதவீதம் வரை ஏற்றுமதி ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், 25,000 கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரி கட்ட மத்திய அரசு உதவ வேண்டும் என, அவர் குறிப்பிட்டுள்ளார்.