Paristamil Navigation Paristamil advert login

இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் மேனேஜர் சவால்?

இட்லி கடை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் மேனேஜர் சவால்?

15 புரட்டாசி 2025 திங்கள் 11:43 | பார்வைகள் : 190


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் ஜொலித்து வருகிறார் தனுஷ். இதுவரை அவர் இயக்கத்தில் பா பாண்டி, ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஆகிய மூன்று படங்கள் வெளிவந்துள்ளன. தற்போது நான்காவது தனுஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் இட்லி கடை. இப்படத்தை இயக்கியது மட்டும் இன்றி அதில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் தனுஷ். டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை தயாரித்துள்ளார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். இப்படம் வருகிற அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

இந்த நிலையில் இட்லி கடை திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் தனுஷ் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகர் தனுஷின் மேனேஜர் ஆன ஸ்ரேயாஸ் பேசியது சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறி இருக்கிறது. தனுசுக்கு எதிராக சிலர் நெகட்டிவ் பி ஆர் செய்து வருவதாக பகிரங்க குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார் ஸ்ரேயாஸ். அதுமட்டுமின்றி அவர் வளர்த்து விட்ட நடிகர்களே அவரை எதிர்ப்பதாகவும், அவர் குறித்து அவதூறு பரப்புவதாகவும் ஸ்ரேயாஸ் பேசியுள்ளது பூதாகரமாக வெடித்துள்ளது.

இட்லி கடை இசை வெளியீட்டு விழாவில் ஸ்ரேயாஸ் பேசியதாவது : ஃபேமஸ் ஆக இரண்டு வழி இருக்கு. ஒன்னு ரத்தம் சிந்தி வேர்வை சிந்தி உழைச்சு டாப்புக்கு வர்றது. இரண்டாவது டாப்ல இருக்கிறவங்கள அடிச்சு மேல வர்றது. உங்கள வச்சு கிராஸ் பண்ணவங்க. உங்களால வளந்தவங்க. நீங்க வாழ்க்கை கொடுத்தவங்க. நேருக்கு நேர் மோதுனா ஓகே. ஆனா ஒரு கம்ப்யூட்டர் பின்னாடி ஒளிஞ்சிகிட்டு பேசுறது ஏத்துக்க முடியல. நீங்க பாலிவுட், கோலிவுட், டோலிவுட், ஹாலிவுட் என எல்லா வுட்லையும் படம் பண்ணிட்டீங்க. நீங்க நடிச்சா மட்டும் பத்தாது. பி ஆர் பண்ணவும் கத்துக்கோங்க. ஒருத்தன் பத்து பேர அடிச்சா அவன் தலைவன்.

தலைவர் சொன்ன மாதிரி, நல்லவனா இருங்க, ரொம்ப நல்லவனா இருக்காதீங்க என ஸ்ரேயாஸ் பேசியிருந்தார். அவரின் இந்த பேச்சு தற்போது கோலிவுட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உங்களால் உயர்ந்தவங்க என்று ஸ்ரேயாஸ் ஹைலைட் பண்ணி பேசி இருப்பதை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள், அவர் சிவகார்த்திகேயனை தான் சூசகமாக தாக்கி பேசியிருப்பதாக கூறி வருகின்றனர். சிவகார்த்திகேயனை மூணு படம் மூலம் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் தனுஷ். அதுமட்டுமின்றி அவர் ஹீரோவாக நடித்த எதிர்நீச்சல், காக்கிச்சட்டை போன்ற படங்களை தயாரித்து அவரை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தி விட்டதும் தனுஷ் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக‌ விளம்பரங்கள்