துணை ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் நிறுத்த எதிர்கட்சிகள் திட்டம்?

11 ஆவணி 2025 திங்கள் 07:13 | பார்வைகள் : 143
துணை ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இடம் பெற்ற, 'இண்டி' கூட்டணி திட்டமிட்டுள்ளது. இது குறித்து, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், டில்லியில் இன்றிரவு முக்கிய ஆலோசனை நடக்கிறது. முன்னதாக காலை 11:30 மணி அளவில், தேர்தல் முறைகேடு தொடர்பாக, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் தலைமையில், பார்லிமென்டில் இருந்து தேர்தல் கமிஷன் அலுவலகம் நோக்கி மாபெரும் பேரணி நடக்கிறது.
நாட்டின், 14வது துணை ஜனாதிபதியாக, 2022 ஆகஸ்டில் பதவியேற்ற ஜக்தீப் தன்கர், 74, உடல்நிலையை காரணம் காட்டி, கடந்த மாதம் 21ம் தேதி ராஜினாமா செய்தார். பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே அவர் ராஜினாமா செய்தது, தேசிய அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.
பதவி விலகினார்
மத்திய பா.ஜ., அரசுக்கும், அவருக்கும் கருத்து வேறுபாடு நிலவியதால் பதவி விலகியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, 15வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்கும் பணியை முடுக்கிவிட்ட தேர்தல் கமிஷன், தேர்தல் நடத்தும் அதிகாரியாக ராஜ்யசபா பொதுச்செயலர் பி.சி.மோடியை நியமித்து உத்தரவிட்டது.
துணை ஜனாதிபதி தேர்தல் செப்., 9ல் நடக்கும் என்றும், ஓட்டுப்பதிவு முடிந்ததும் அன்றைய தினம் மாலை 5:00 மணிக்கு பின், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் என்றும் தேர்தல் கமிஷன் சமீபத்தில் அறிவித்தது.
துணை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7ம் தேதி துவங்கிய நிலையில், வரும் 21 வரை மனு தாக்கல் செய்யலாம்.
ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டால் மட்டுமே தேர்தல் நடக்கும். ஒருவர் மட்டுமே போட்டியிட்டால், அவர் போட்டியின்றி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.
நெருக்கடி
துணை ஜனாதிபதி தேர்தலில், மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும் நிலையில், அக்கூட்டணிக்கு கடும் நெருக்கடி கொடுக்க, காங்., - தி.மு.க., - திரிணமுல் காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இண்டி கூட்டணி முடிவு செய்துள்ளது.
அதனால், துணை ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்தவும் இண்டி கூட்டணி திட்டமிட்டுள்ளது.
காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டில்லி சாணக்யபுரியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில், கூட்டணி கட்சி தலைவர்களுக்கு இன்றிரவு விருந்து அளிக்கிறார். அப்போது, பொது வேட்பாளர் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
இது குறித்து, காங்., வட்டாரங்கள் கூறியதாவது:
துணை ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது. எனினும், அக்கூட்டணிக்கு வெற்றியை எளிதாக கொடுக்கக்கூடாது என்பதில் இண்டி கூட்டணி உறுதியாக உள்ளது. எனவே, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நெருக்கடி கொடுக்க, பொது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்துள்ளோம்.
ஒரு மித்த கருத்து
தே.ஜ., கூட்டணியின் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்ட உடன், நாங்களும் எங்களது வேட்பாளரை அறிவிப்போம். இது தொடர்பாக, கூட்டணி கட்சி தலைவர்களுடன் மல்லிகார்ஜுன கார்கே பேசி வருகிறார்; அவர்களிடையே ஒருமித்த கருத்தை ஏற்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளார்.
பீஹாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் விவகாரத்தில், இண்டி கூட்டணியில் ஒற்றுமை நிலவுகிறது. அதேபோல, துணை ஜனாதிபதி தேர்தலிலும் ஒற்றுமை இருக்கும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.
யாருக்கு வெற்றி?
லோக்சபா மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்களின் மொத்த எண்ணிக்கை 788. ஏழு இடங்கள் காலியாக இருப்பதால், தற்போது 781 எம்.பி.,க்கள் உள்ளனர். துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற, 391 எம்.பி.,க்களின் ஓட்டுகள் தேவை. மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணிக்கு, லோக்சபா, ராஜ்யசபாவில் மொத்தம் 422 எம்.பி.,க்களின் ஆதரவு இருப்பதால், அக்கூட்டணியின் வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி. எதிர்க்கட்சிகளின் இண்டி கூட்டணிக்கு, இரு சபைகளிலும் 313 எம்.பி.,க்களே உள்ளனர்.
ராகுல் தலைமையில் மாபெரும் பேரணி
கடந்த லோக்சபா தேர்தலில் ஓட்டுகளை திருடி பா.ஜ., வெற்றி பெற்றதாகவும், அதற்கு தேர்தல் கமிஷன் உடந்தையாக இருந்ததாகவும், எதிர்க்கட்சி தலைவர் ராகுல் சில விபரங்களுடன் சமீபத்தில் குற்றஞ்சாட்டினார். இதை, தேர்தல் கமிஷன் மறுத்து வருகிறது. இது தொடர்பாக, டில்லியில் உள்ள தன் வீட்டில், இண்டி கூட்டணி கட்சி தலைவர்களுக்கு சில விளக்கப் படங்களுடன் ராகுல் எடுத்துரைத்தார். லோக்சபா தேர்தலுக்கு பின், இண்டி கூட்டணியின் முதல் கூட்டம் இது. இந்நிலையில், தேர்தல் முறைகேடு தொடர்பாக பார்லிமென்டில் இருந்து தேர்தல் கமிஷன் வரை, இன்று காலை 11:30 மணி அளவில், ராகுல் தலைமையில் இண்டி கூட்டணி எம்.பி.,க்கள் மாபெரும் பேரணி செல்கின்றனர். இதில், 300 எம்.பி.,க்கள் பங்கேற்க உள்ளனர். இதனால், அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025
-
1