அடுத்தடுத்து அரங்கேறும் கொலைகளால் பீதி; சிவகங்கை அருகே காலியானது நாட்டாகுடி கிராமம்

6 ஆவணி 2025 புதன் 12:05 | பார்வைகள் : 180
சிவகங்கை மாவட்டம், நாட்டாகுடி கிராமத்தில் தொடர் கொலைகள், அடிப்படை வசதிகள் இல்லாதது போன்றவற்றால், மக்கள் கிராமத்தை காலி செய்து வெளியூர்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
சிவகங்கை ஊராட்சி ஒன்றியம், மாத்துார் ஊராட்சியின் கீழ் நாட்டாகுடி, வேலாங்குளம், இலந்தங்குடி உட்பட ஐந்து கிராமங்கள் உள்ளன. இதில், நாட்டாகுடி கிராமத்தில் ஐந்து தலைமுறைகளாக 150 குடும்பத்தினர் விவசாயம், கால்நடை வளர்ப்பு போன்ற தொழில்களில் ஈடுபட்டு வந்தனர். உப்பாற்றில் ஓடும் வெள்ள நீர், நாட்டாகுடி கண்மாயை நிரப்பி செல்வதன் மூலம்,200 ஏக்கரில் விவசாயம் நடைபெற்றது.
மேலும், 20 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வறட்சியால், அக்கிராம மக்கள் படிப்படியாக மதுரை, சிவகங்கை போன்ற நகரங்களுக்கு குடியேறினர். எஞ்சிய 50 குடும்பங்கள் தொடர்ந்து வசித்தனர். குடிநீர், ரோடு, தெருவிளக்கு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தருமாறு பலமுறை கோரிக்கை வைத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை.
இந்நிலையில், கிராமத்தில் குற்ற சம்பவங்களும் அதிகரிக்க துவங்கின. ஒரு வயது குழந்தையின் கழுத்தை நெரித்து தந்தையே கொலை செய்து உப்பாற்றில் புதைத்தார். கிராம முக்கியஸ்தர் கணேசன் என்பவரை, ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது.
ஜூலை 20 மதியம் 1:00 மணிக்கு டூ - வீலரில் வந்த 3 பேர் வீட்டிற்கு முன் அமர்ந்திருந்த விவசாய கூலி தொழிலாளி சோணைமுத்து, 62, என்பவரை கொலை செய்து, தலையை துண்டித்து சிவகங்கை மாவட்ட நீதிமன்றம் அருகே உள்ள கண்மாயில் வீசி சென்றனர்.
ஏற்கனவே பல குடும்பங்கள் வெளியேறிய நிலையில், இந்த சம்பவத்தை அடுத்து இருந்த 10 குடும்பமும் கால்நடைகளுடன் பிற நகரங்களுக்கு சென்றுவிட்டனர். அடுத்தடுத்து அரங்கேறிய கொலைகளால் ஒரு கிராமமே காலியானது, சிவகங்கை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சட்டசபை தேர்தல் வரஉள்ளதை அடுத்து, ஆளுங்கட்சிக்கு எதிராக பிரசாரத்தில் நாட்டாகுடி கிராம அவலத்தையும் கையில் எடுக்க எதிர்க் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
தாயை போன்றது சொந்த ஊர்
ஐந்து தலைமுறைகளாக இக்கிராமத்தில் 150 குடும்பங்களை சேர்ந்தவர்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டனர். எந்த வசதியும் இல்லை. சோணைமுத்து கொலைக்கு பின் எல்லோரும் வெளியேறிவிட்டனர். 'பெற்ற தாயை போன்றது சொந்த ஊர்' என்பதால், கடைசி காலத்தில் நான் மட்டுமே என் கிராமத்தை பாதுகாக்கும் நோக்கில் தொடர்ந்து தனியாக வசிக்கிறேன். - தங்கராஜ், 55, நாட்டாகுடி.
விசாரணைக்கு உத்தரவு
நாட்டாகுடி கிராமத்தில் தொடர் கொலைகளால் மக்கள் ஊரை காலி செய்து விட்டு சென்றுள்ளனர். இது குறித்து விசாரித்து அறிக்கை வழங்க எஸ்.பி., சிவபிரசாத்திடம் தெரிவித்து உள்ளேன். நாட்டாகுடி மக்கள் அச்சமின்றி கிராமத்தில் மீண்டும் குடியேறலாம். - பொற்கொடி, சிவகங்கை கலெக்டர்
ரூ.4,835 கோடி ஒதுக்கியும் அவலம்
சிவகங்கை மாவட்டம், நாட்டாகுடி கிராமம் தற்போது 'பேய்' கிராமம் போல் காட்சி அளிக்கிறது. முதல்வர் ஸ்டாலின் கண்காணிப்பின் கீழ் நிர்வாக அக்கறையின்மையின் வெளிப்படையான அடையாளம் இந்த கிராமம். அடிப்படை வசதிகள், சுத்தமான குடிநீர் வசதி இல்லை என, அவர்கள் நீண்டகாலமாக புகார் கூறி வருகின்றனர். நான்கு ஆண்டுகளில், மத்திய அரசு 'ஜல் ஜீவன் மிஷன்' திட்டத்திற்காக தமிழகத்திற்கு, 4,835 கோடி ரூபாய் வரை ஒதுக்கியுள்ளது. ஆனால், குழாய் நீரை பெற போராடும் கிராமங்கள் இன்னும் உள்ளன. நாட்டாகுடி கிராமத்தை உள்ளடக்கிய மாத்துார் ஊராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் 100 சதவீத குடிநீர் குழாய் இணைப்பு தந்துள்ளாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது நிர்வாக தோல்வி மட்டுமல்ல, துரோகம். - அண்ணாமலை பா.ஜ., முன்னாள் மாநில தலைவர்
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025