Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவுக்கு இந்தியா அடிபணிய 24 மணி நேரம்! கெடு

அமெரிக்காவுக்கு இந்தியா அடிபணிய 24 மணி நேரம்! கெடு

6 ஆவணி 2025 புதன் 05:02 | பார்வைகள் : 188


ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ச்சியாக அதிகளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. இதனால், அந்நாட்டின் பொருட்களுக்கு ஏற்கனவே விதித்த, 25 சதவீத வரியை, அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் உயர்த்தப் போகிறேன்,'' என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன் மூலம், 24 மணி நேரத்திற்குள் முடிவை மாற்றிக் கொள்ளும்படி, இந்தியாவுக்கு அவர் மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, 2022 பிப்ரவரியில், ரஷ்யா போர் தொடுத்தது. இதை நிறுத்தும்படி இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியும் ரஷ்யா கேட்கவில்லை. மூன்று ஆண்டுகளுக்கும் மேல் நடக்கும் ரஷ்யா - உக்ரைன் போரில், ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

ரஷ்யாவின் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்த அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள், அந்நாட்டின் மீது பொருளாதார தடை விதித்தன. இதனால், தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெயை ரஷ்யா விற்பனை செய்தது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திய நம் நாடு, மலிவு விலையில் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. முதலில் இந்த நடவடிக்கையை ஆதரித்த அமெரிக்கா, தற்போது எதிர்த்து வருகிறது. போதாதென்று, மேற்கத்திய நாடுகளும் வரிந்து கட்டி நிற்கின்றன. இதை

கண்டுகொள்ளாமல், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெயை நம் நாடு தொடர்ந்து வாங்கி வருகிறது. இதனால் கடுப்பான அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய பொருட்களுக்கு, 25 சதவீத வரியும், ரஷ்யாவுடன் வர்த்தகம் மேற்கொள்வதால், கூடுதலாக அபராதம் விதிப்பதாகவும் சமீபத்தில் அறிவித்தார்.

மேலும், இந்தியா - ரஷ்யாவின் பொருளாதாரம் செயலிழந்து விட்டதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார். முதலில், ஆக., 1ல் இந்த உத்தரவு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், பிறகு, ஆக., 7க்கு மாற்றப்பட்டது.

இந்த அறிவிப்புடன் நிற்காமல், கடந்த சில நாட்களாக நம் நாட்டை மிரட்டும் வகையில் அதிபர் டிரம்ப் பேசி வருகிறார். இது தொடர்பாக, வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீப் ஜெய்ஸ்வால் நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், 'ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா ஆகியவை இந்தியாவை குறிவைப்பது நியாயமற்றது; பொருத்தமற்றது. தேசிய நலன், பொருளாதாரத்தை பாதுகாக்க அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுக்கும்' என, குறிப்பிட்டிருந்தார்.

மேலும், அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும், ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடுவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

இந்த பதற்றங்களுக்கு மத்தியில், ஆங்கில செய்தி சேனலுக்கு, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று அளித்த பேட்டி:

இந்தியா ஒரு நல்ல சிறந்த வர்த்தக கூட்டாளி அல்ல. எங்களுடன் அந்நாடு நிறைய வர்த்தகம் செய்கிறது. நாங்கள் குறைந்த அளவிலேயே செய்கிறோம். இந்திய பொருட்களுக்கு, 25 சதவீத வரியை நிர்ணயித்தோம். ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை அந்நாடு நிறுத்தாததால், அடுத்த 24 மணி நேரத்தில் இந்த வரியை மேலும் கடுமையாக அதிகரிக்கப் போகிறேன். ரஷ்யாவின் போர் நெருப்பில், இந்தியா எண்ணெய் ஊற்றுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதன் மூலம், 24 மணி நேரத்துக்குள் முடிவை மாற்றிக் கொள்ளும்படி, நம் நாட்டுக்கு அதிபர் டிரம்ப் மறைமுகமாக எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.

நம் ராணுவம் பதிலடி வர்த்தகம் தொடர்பான பதற்றங்களுக்கு மத்தியில், நம் ராணுவத்தின் கிழக்கு பிராந்திய பிரிவு, 'இதே நாளில் அன்று' என தலைப்பிட்டு, 1971 ஆக., 5ல், ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியின் புகைப்படத்தை நேற்று வெளியிட்டது. அதில், '1954 முதல், பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்ட அமெரிக்க ஆயுதங்களின் மதிப்பு, 17,600 கோடி ரூபாய்' என, கூறப்பட்டுள்ளது. அத்துடன், 1971ல், இந்தியா - பாக்., போர் துவங்கும் முன், சோவியத் யூனியன், பிரான்ஸ் நாடுகள் பாக்.,கிற்கு ஆயுதங்கள் வழங்க மறுத்தன. ஆனால், அமெரிக்காவும், சீனாவும் அந்நாட்டுக்கு குறைந்த விலையில் ஆயுதங்களை விற் பனை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நாட்டின் நலனே முக்கியம்! ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என்ற அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணிய முடியாது என இந்தியா தக்க பதிலடி கொடுத்திருக்கிறது. சொந்த லாபத்துக்காக ரஷ்யாவிடம் இருந்து அமெரிக்காவும், ஐரோப்பிய யூனியனும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும்போது, இந்தியா மட்டும் ஏன் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் திருப்பி கேள்வி கேட்டு அமெரிக்காவை மிரள வைத்துள்ளது. ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து, உக்ரைன் போருக்கு இந்தியா மறைமுகமாக நிதியுதவி அளித்து வருகிறது என்று, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் குற்றம்சாட்டினார். எனவே, ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தாவிட்டால் இந்தியா மீது கூடுதல் வரி விதிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று, நேற்று முன்தினம் அவர் கூறினார். 
இந்திய இறக்குமதிக்கு, 25 சதவீதம் வரி என்ற அமெரிக்காவின் அறிவிப்பு மற்றும் டிரம்பின் விமர்சனங்களுக்கு, மத்திய அரசு பதிலளிக்காமல் இருந்தது. ஆனால், கூடுதல் வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்த சில நிமிடங்களில், மிகவும் கடுமையான வார்த்தைகளுடன் கூடிய விரிவான விளக்கத்தை நம் வெளியுறவுத் துறை நேற்று முன்தினம் இரவு வெளியிட்டது. இந்த விவகாரம் தொடர்பாக, அந்த அறிக்கையில் பட்டியலிடப்பட்டுள்ள ஆறு 6 அம்சங்கள்: 
*ரஷ்யா - உக்ரைன் இடையே போர் தொடங்கியபோது, எண்ணெய் விநியோகம் ஐரோப்பாவுக்கு திருப்பி விடப்பட்டது. இதன் காரணமாகவே ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு இந்தியா முடிவெடுத்தது 
*சர்வதேச சந்தை நிலவரம் காரணமாகவே, ரஷ்யாவுடன் எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டது. ஆனால், ஐரோப்பிய யூனியனும் அமெரிக்காவும் அப்படியல்ல. ரஷ்யாவுடன் வர்த்தகம் வைத்துக் கொள்வதற்கு இரண்டுக்குமே எந்த வலுக்கட்டாயமும் ஏற்படவில்லை
*கடந்த 2023 மற்றும் 2024ம் ஆண்டுகளில் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா இறக்குமதி செய்ததை விட, ஐரோப்பிய யூனியன் அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்கியுள்ளது 
*ஐரோப்பா - ரஷ்யா இடையிலான இந்த வர்த்தகம் வெறுமனே எரிபொருளை சார்ந்தது மட்டுமல்ல, அத்தியாவசியம் இல்லாத பொருட்களை இறக்குமதி செய்வதிலும் இருந்தது
* அமெரிக்கா தன் அணுசக்தி துறை, மின்சார வாகன துறை, உரம், ரசாயனம் என பல்வேறு துறைகளுக்கு தேவையான பொருட்களை ரஷ்யாவிடம் இருந்தே தொடர்ந்து இறக்குமதி செய்து வருகிறது. 
* அமெரிக்காவும், ஐரோப்பாவும் எந்தவொரு நியாயமான காரணமும் இல்லாமல் இந்தியாவை குறைகூறி வருகின்றன. கச்சா எண்ணெய் இறக்குமதி என்பது இந்திய பொருளாதாரத்திற்கு அடிப்படையானது. தேச நலன் மற்றும் பொருளாதார பாதுகாப்பை மையமாக கொண்டது. எனவே, தேசம் மற்றும் பொருளாதார நலனை காப்பாற்ற தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா எடுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்