Paristamil Navigation Paristamil advert login

தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத்

தேசிய விருதுகளுக்குக் காரணமான அட்லீ, அனிருத்

2 ஆவணி 2025 சனி 14:27 | பார்வைகள் : 151


2023ம் ஆண்டிற்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அவற்றில் அட்லீ இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்து வெளிவந்த 'ஜவான்' ஹிந்தித் திரைப்படம் சிறந்த நடிகர் மற்றும் சிறந்த பின்னணிப் பாடகி ஆகிய இரண்டு விருதுகளை வென்றுள்ளது.

இந்த இரண்டு விருதுகளுக்கும் தமிழ்க் கலைஞர்களான அட்லீ, அனிருத் ஆகியோர் தான் காரணம். தமிழில் தொடர்ந்து சில வெற்றிப் படங்களைக் கொடுத்த இயக்குனரான அட்லீ ஹிந்தியில் முதன் முதலில் இயக்கிய திரைப்படம் 'ஜவான்'. அத்திரைப்படத்தில் ஷாரூக்கானுக்கு அப்பா, மகன் என இரண்டு கதாபாத்திரங்களை உருவாக்கி இருந்தார். அப்பா கேப்டன் விக்ரம் ரத்தோர், மகன் ஆசாத் ரத்தோர் என இரண்டு கதாபாத்திரங்களிலும் ஷாரூக்கின் நடிப்பு தேசிய விருது குழுவினரைக் கவர்ந்து அவர்கள் சிறந்த நடிகராகத் தேர்வு செய்துள்ளனர்.

படத்தில் சூப்பர் ஹிட்டான பாடலான 'சலியா' என்ற பாடலைப் பாடிய ஷில்பா ராவ், சிறந்த பாடகிக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடலை அர்ஜித்தும் பாடியுள்ளார். யு டியுப் தளத்தில் இந்தப் பாடல் 570 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. 'ஜெயிலர்' படத்தில் இடம் பெற்ற 'காவாலய்யா' பாடலைப் பாடியவர்தான் தேசிய விருது வென்றுள்ள ஷில்பா ராவ். தமிழில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் வெளிவந்த 'நான் மகான் அல்ல' படத்தில் இடம் பெற்ற 'ஒரு மாலை நேரம்' பாடல்தான் தமிழில் ஷில்பா ராவ் பாடிய முதல் பாடல். ஹிந்தி, தமிழ், குஜராத்தி, கன்னடம், மலையாளம், பெங்காலி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பாடியுள்ளவர் ஷில்பா.

இரண்டு ஹிந்திக் கலைஞர்கள் முதல் முறை தேசிய விருதுகளைப் பெற தமிழ்க் கலைஞர்கள் காரணமாக இருந்துள்ளார்கள்.

வர்த்தக‌ விளம்பரங்கள்