Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் சிக்கியது எப்படி?

 போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் சிக்கியது எப்படி?

23 ஆனி 2025 திங்கள் 15:36 | பார்வைகள் : 2322


நடிகர் ஸ்ரீகாந்த், போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் சிக்கி இருப்பது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக பிரதீப் என்பவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஸ்ரீகாந்தை விசாரணைக்கு அழைத்த போலீசார், நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து அவருடைய ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை செய்ததில் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியாகி உள்ளது.

போலீசார் நடத்திய விசாரணை மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு பின் நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதியானதை அடுத்து அவரை போலீசார் கைது செய்து உள்ளனர். இந்த நிலையில் நடிகர் ஸ்ரீகாந்த் இந்த வழக்கில் சிக்கியது எப்படி என்பது குறித்த திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது.

பிரதீப் என்பவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தான் நடிகர் ஸ்ரீகாந்த் சிக்கி இருக்கிறார். கொரோனா காலகட்டமான 2020-ம் ஆண்டு பெங்களூரு சென்ற பிரதீப் அங்கிருந்த நைஜீரியா நாட்டு நண்பர்களிடம் பழகி அவர்களிடம் கொகைனை வாங்கி பயன்படுத்தியது மட்டுமின்றி, தனக்கு தெரிந்தவர்களுக்கு விற்பனை செய்து வந்ததாக பிரதீப் வாக்குமூலம் அளித்துள்ளார். ஒரு கிராம் கொகைனை 7 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி அதை 12 ஆயிரத்துக்கு விற்று வந்ததாகவும் பிரதீப் கூறி உள்ளார்.

பிரதீப்புக்கு பப்பு மற்றும் பாருக்கு செல்லும் பழக்கமும் இருந்துள்ளது. அப்படி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் நண்பர்களுடன் சேர்ந்து ஒருமுறை பாருக்கு சென்றபோது அதிமுக ஐடி விங்கை சேர்ந்த பிரசாத் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இருக்கிறது. அப்போது தன்னிடம் அடிக்கடி பிரசாத் கொகைன் வாங்குவார் என்றும், அந்த சமயத்தில் ஸ்ரீகாந்தை வைத்து அவர் தீங்கிரை என்கிற திரைப்படத்தை எடுத்து வந்த பிரசாத், நடிகர் ஸ்ரீகாந்துக்கு தேவைப்படுகிறது என்று சொல்லி தன்னிடம் அடிக்கடி போதைப்பொருள் வாங்கியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதுமட்டுமின்றி பிரசாத் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டிக்கு தான் சென்றிருந்தபோது, நடிகர்கள் ஸ்ரீகாந்தும், ஸ்ரீ கிருஷ்ணாவும் கொகைனை பிரசாத்திடம் வாங்கிய பயன்படுத்தியதை தான் நேரடியாக பார்த்ததாகவும் பிரதீப் வாக்குமூலம் அளித்திருக்கிறார். தான் இதுவரை பிரசாத்துக்கு மட்டும் 2023-ம் ஆண்டில் 40 முறைக்கு மேல் கொகைனை விற்றுள்ளதாகவும், அதற்கான தொகையை G Pay மூலமாக 4.72 லட்சத்தை பெற்றிருப்பதாக பிரதீப் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 17ந் தேதி பெங்களூரு சென்று கொகைன் வாங்கிவிட்டு வந்துகொண்டிருந்தபோது நுங்கம்பாக்கம் வானிலை மையம் பேருந்து நிறுத்தம் அருகில் நின்றுகொண்டிருந்தபோது தன்னை காவல்துறையினர் கைது செய்ததாக பிரதீப் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நடிகர் ஸ்ரீகாந்த் இன்று காலை தனிப்படை போலீசாரால் விசாரணைக்கு எடுக்கப்பட்டதில் அவர் போதைப்பொருள் வாங்கியது உறுதியானது. அவரின் மொபைலை ஆய்வு செய்தபோது அவர் பிரசாத்திற்கு G Pay மூலம் பணம் அனுப்பியது தெரியவந்துள்ளது. அதன் அடிப்படையில் தான் தற்போது ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இதேபோல் நடிகர் கிருஷ்ணாவும் பிரசாத்திடம் போதைப்பொருள் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அவரிடமும் விரைவில் போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளார்களாம். இதற்கு முன்னர் தெலுங்கு, இந்தி மற்றும் மலையாள திரையுலகில் போதைப்பொருள் புழக்கம் இருப்பது தெரியவந்த நிலையில், தற்போது தமிழ் திரையுலகிலும் போதை பொருள் விவகாரம் சூடுபிடித்துள்ளது. தற்போது இரண்டு நடிகர்கள் சிக்கி உள்ளனர். அவர்கள் மூலம் வேறு நடிகர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

வர்த்தக‌ விளம்பரங்கள்