கில்லுடனான கூட்டணி..! சதம் விளாசிய ஜெய்ஸ்வால் பெருமிதம்!

22 ஆனி 2025 ஞாயிறு 13:24 | பார்வைகள் : 189
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், இந்திய பேட்ஸ்மேன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது சிறப்பான ஆட்டம் மற்றும் கேப்டன் ஷுப்மன் கில்லுடன் மூன்றாவது விக்கெட்டுக்கு அமைத்த 129 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் குறித்தும், களத்தில் தான் செயல்படும் விதம் குறித்தும் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
இங்கிலாந்து மண்ணில் தனது முதல் இன்னிங்ஸிலேயே சதம் விளாசி, தனது வளர்ந்து வரும் திறமையை ஜெய்ஸ்வால் நிரூபித்துள்ளார்.
இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள், இந்தியா, ஆவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து என நான்கு வெவ்வேறு நாடுகளில் தனது முதல் ஐந்து சதங்களை அவர் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் நாள் ஆட்டத்திற்குப் பிறகு ஜெய்ஸ்வால் பேசுகையில், "களத்தில் நான் செய்யும் ஒவ்வொரு விஷயத்தையும் உண்மையிலேயே ரசிக்கிறேன் என்று நினைக்கிறேன், ஆனால் சில தருணங்கள் மிகவும் சிறப்பானவை. கிரிக்கெட் எப்போதும் சவால்களைத் தரும், அவை ஒவ்வொரு நிலையிலும் மாறுபடும். என் மீதான எனது செயல்பாட்டில் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.
ஒரு போட்டியின் போது, களச் சூழல், அணிக்கு என்ன தேவை, பந்துவீச்சாளர்களின் திட்டங்கள் ஆகியவற்றை நான் எப்போதும் கருத்தில் கொள்வேன்" என்றார்.
ஷுப்மன் கில்லுடன் கூட்டணி அமைத்து விளையாடியது குறித்து ஜெய்ஸ்வால் மேலும் கூறுகையில், "ஷுப்மன் கில்லுடன் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடியது சிறந்த அனுபவமாக இருந்தது.
அவர் மிகவும் பக்குவத்துடன் ஆடினார்.
இன்னிங்ஸை ஒவ்வொரு செஷனாக அணுகுவது எங்கள் திட்டமாக இருந்தது, பந்துவீச்சாளர்கள் தங்கள் லெந்த்தை தவறவிடும் பந்துகளை நாங்கள் இலக்கு வைத்தோம்" என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், இங்கிலாந்து அணியின் ஆலோசகர் டிம் சவுதி, ஷுப்மன் கில் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரின் சிறப்பான பேட்டிங் ஆட்டத்தையும் பாராட்டினார்.