உலகிலேயே அசைவ உணவுகள் தடை செய்யப்பட்ட ஒரே ஒரு இந்திய நகரம்

27 வைகாசி 2025 செவ்வாய் 11:47 | பார்வைகள் : 522
உலகின் பெரும்பாலான நாடுகளில் அசைவ உணவுகள் மக்களின் விருப்பமான உணவுகளில் ஒன்றாக இருந்து வருகிறது.
இருப்பினும், இந்தியா போன்ற நாடுகளில் அசைவ உணவிற்கு நிகராக சைவ உணவுகளை விரும்பி சாப்பிடுவோர் பலரும் உள்ளனர்.
இந்நிலையில், உலகிலேயே அசைவ உணவுகளை தடை செய்யப்பட்ட ஒரே ஒரு நகரம் இந்தியாவில் உள்ளது.
அது இந்தியாவின் குஜராத் மாநிலம் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பலிட்டனா என்ற நகரம் ஆகும்.
இந்த பலிட்டனா நகரத்தில் அசைவ உணவுகள் முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் ஜைன மத உணர்வுகள், வரலாறு, கலாச்சாரம் ஆகியவற்றை பின்பலமாக கொண்ட நகரமாக இந்த பலிட்டனா இருந்து வருகிறது.
ஜைன மதம் என்பது அகிம்சையை மையமாகக் கொண்ட ஒரு இந்திய மதம் ஆகும். இது அனைத்து உயிரினங்களுக்கும் மரியாதையையும், ஒழுக்கமான நடத்தையையும் வலியுறுத்துகிறது.
இங்கு உள்ள சத்துருஞ்ஜெயா மலைத்தொடர்களில் சுமார் 800 ஜைன மத கோவில்கள் உள்ளன.
இந்நிலையில் 2014ஆம் ஆண்டு 200 ஜைன மதத் துறவிகள் நடத்திய போராட்டத்தை தொடர்ந்து அங்கு சுமார் 200க்கும் அதிகமான இறைச்சிக் கடைகள் மூடப்பட்டன.
தொடர்ந்து போராட்டங்கள் வெடித்த நிலையில் அரசு, பள்ளிட்டனா நகரத்தில் இறைச்சி கடைகளுக்கு முழுமையாக தடை விதித்துள்ளது.
இந்த பலிட்டனா நகரத்தில் ஏராளமான சைவ உணவுகள் வகை வகையாக கிடைக்கின்றது.
சைவம் மட்டும் உண்ணும் மனிதர்களுக்கு பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள இந்த பலிட்டனா நகரம் சொர்க்க பூமியாக திகழ்கிறது.