ரசாயன துண்டை பயன்படுத்தி பந்தை சேதப்படுத்தினாரா அஸ்வின்?

16 ஆனி 2025 திங்கள் 16:51 | பார்வைகள் : 125
அஸ்வின் பந்தை சேதப்படுத்தியதாக மதுரை பாந்தர்ஸ் அணி புகாரளித்துள்ளது.
தமிழ்நாடு ப்ரீமியர் லீக் கிரிக்கெட்(TNPL) வரும் ஜூன் 5 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த 14 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் மற்றும் மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதியது.
இந்த போட்டியில், திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி அணித்தலைவர் ரவிச்சந்திரன் அஸ்வின், பந்தை சேதப்படுத்தியதாக மதுரை பாந்தர்ஸ் அணி நிர்வாகம் TNPL நிர்வாகத்திடம் புகார் அளித்து உள்ளது.
ரசாயனம் தடவப்பட்ட துண்டை பயன்படுத்தி, பந்தை சேதப்படுத்தியதாகவும், இதனால் பந்தின் எடை அதிகரித்து, பேட்டில் படும்போது அது உலோக ஒலியை ஏற்படுத்தியது எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்த புகாருக்கு தேவையான ஆதாரங்களை வழங்குமாறு TNPL நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஆதாரங்கள் அளித்தால் இது தொடர்பாக விசாரிக்க குழு அமைக்கப்படும். ஆதாரமின்றி குற்றச்சாட்டு சுமத்தினால், மதுரை பாந்தர்ஸ் அணி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என TNPL நிர்வாகம் அறிவித்துள்ளது.
மழைக்காலம் என்பதால், இரவில் பனிப்பொழிவு இருப்பதாலும் பந்து வழுக்காமல் இருக்க பந்தை துடைக்க துண்டுகளை பயன்படுத்தலாம். ஆனால் நடுவர்கள் முன்பே பந்தை துடைக்க வேண்டும் என்ற விதி உள்ளது.
முன்னதாக திருப்பூர் தமிழன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், அஸ்வின் நடுவர்களிடம் வாதிட்டதற்கும், கிளவுஸை தூக்கி எறிந்ததற்கும் போட்டி கட்டணத்தில் 30% அபராதம் விதிக்கப்பட்டது.