Paristamil Navigation Paristamil advert login

குழந்தை நல்ல முறையில் வளர்வதற்கு பெற்றோர்களின் பங்கு என்ன?

குழந்தை நல்ல முறையில் வளர்வதற்கு  பெற்றோர்களின் பங்கு  என்ன?

9 ஆனி 2025 திங்கள் 18:06 | பார்வைகள் : 234


உலகம் முழுவதும் இருக்கும் வீடுகளில் உள்ள பெற்றோர்கள் அனைவருமே ‘எல்லாவற்றையும் சரியாக செய்ய வேண்டும்’ என்ற எண்ணத்திலேயே வாழ்கின்றனர். குழந்தைகளுக்கு ஒரு வழக்கத்தை அமைப்பது முதல் ஸ்கிரீன் நேரத்தை நிர்வகிப்பது மற்றும் பிள்ளைகளைப் பள்ளிப் பாடங்கள் செய்ய வைப்பது, அவர்களுடைய மன நலனைக் கவனித்துக் கொள்வது என்று சிறந்த பெற்றோராக இருப்பதற்குத் தொடர்ச்சியாக ஏதோ ஒரு விஷயத்தைத் துரத்திக் கொண்டே இருக்கின்றனர். ஆனால் இதிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு ஒரு அற்புதமான யோசனை உள்ளது.ஒரு குழந்தை நல்ல முறையில் வளர்வதற்கு 30 சதவீத பெற்றோர் வழிகாட்டுதல் போதுமானது. ஆம், வெறும் 30% தான். இந்த யோசனையானது பொதுவான நம்பிக்கைகளுக்கு எதிரானதாக இருக்கலாம். ஆனால் இது உளவியல் ஆராய்ச்சி மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே உண்மையில் இந்த 30 சதவீத பேரண்டிங் என்பது என்ன, மற்றும் இது குழந்தைகள் மற்றும் பெற்றோர்களை எப்படி மாற்றுகிறது என்பதை இந்தப் பதிவின் மூலமாகப் புரிந்து கொள்ளலாம்.

இந்த 30 சதவீத யோசனை என்பது வெறும் ஒரு நவீன இன்ஃப்ளுயன்சர் மூலமாகவோ அல்லது குழந்தை வளர்ப்பு சம்பந்தப்பட்ட பதிவு மூலமாகவோ பெறப்பட்டது கிடையாது. இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்த டொனால்ட் வினிக்காட் என்ற ஒரு பிரிட்டிஷ் குழந்தை நல மருத்துவர் மற்றும் உளவியலாளர் கண்டுபிடித்த விஷயம். அவருடைய ஆய்வின்படி, பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளின் தேவைகளுக்குக் குறைந்தபட்சம் 30 சதவீதத்திற்குப் பதிலளித்தாலே பிள்ளைகளில் ஆரோக்கியமான உளவியல் மேம்பாடு நடைபெறும் என்று கூறியுள்ளார்.

அப்படி இருக்கும்போது மீதம் இருக்கக்கூடிய 70 சதவீத நேரத்தில் குழந்தைகளைத் தவிர்க்க வேண்டும் என்ற அர்த்தம் கிடையாது. அதாவது ஒரு குழந்தைக்குத் தொடர்ச்சியான ‘பெர்ஃபெக்ஷன்’ தேவை கிடையாது. மாறாக அவர்களுக்குத் தொடர்ச்சியான அன்பு, பராமரிப்பு மற்றும் பாதுகாப்பாகவும், வலிமையாக வளர்வதற்கும் ஆங்காங்கே சில திருத்தங்கள் தேவைப்படுகின்றன.

30 சதவீதம் என்று சொல்லும் பொழுது, ஒரு பெற்றோராக இது குறைந்த முயற்சியாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் உண்மை என்னவென்றால், இங்கு எண்ணிக்கை முக்கியமானது கிடையாது. நேரம் மற்றும் தொடர்ச்சியான முயற்சியே இங்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது. சிறு சிறு தோல்விகள், தாமதமாகக் கிடைக்கும் பாராட்டுதல்கள் மற்றும் ஒரு சில கருத்து வேறுபாடுகள் போன்ற அனுபவங்களைக் குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே அவர்களுடைய மூளையை வலிமையாக்கும். எல்லா விஷயமும் சரியாக நடந்து கொண்டிருந்தால் அவர்களுக்கு எதிர்மறை விஷயங்களை எப்படிக் கையாள வேண்டும் என்பதே தெரியாமல் போகலாம். இதனால் உண்மையான வாழ்க்கையை எதிர்கொள்வதற்கு அவர்கள் தயாராக இருக்க மாட்டார்கள்.

அதே சமயத்தில் பெர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்ற ஓட்டத்தில் இருக்கும் பெற்றோர்களுக்கும் இது ஒருவித நிவாரணத்தைத் தருகிறது. குழந்தைகளுக்குச் சிறந்த வாழ்க்கையைத் தர வேண்டும் என்ற முயற்சியில் ஏதாவது ஒரு சிறிய விஷயம் தவறாக நடந்து விட்டால் கூட அதற்காகக் குற்ற உணர்ச்சி கொள்ளும் ஏராளமான பெற்றோர்கள் உள்ளனர். எனவே ‘30 சதவீதத்தைச் சரியாக செய்தல்’ என்று சொல்லும்போது போதுமான நேரம் கிடைக்கிறது. அப்படி என்றால் 30 சதவீதம் சரி எனும் போது, மீதம் இருக்கக்கூடிய 70% தவறா? அப்படி இல்லை. 70 சதவீதத்தில் பட்டறிவு முறை, தன்னிச்சையாக நடைபெறும் தருணங்கள், தவற விடப்பட்ட விஷயங்கள் மற்றும் ‘இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்று எனக்குத் தெரியவில்லை’ என்பது போன்றவை அடங்கும்.

அதாவது வாழ்க்கையில் எந்த ஒரு ஸ்கிரிப்டும் இல்லாமல் நடக்கக்கூடிய விஷயங்களை அமைதியாக அந்தந்த சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு எதிர்கொள்வது. இது தவறான விஷயம் கிடையாது. மாறாக இது அத்தியாவசியமானது. இது உங்களுக்கு ஒரு சூழ்நிலையோடு தக்க வைத்துக் கொள்வதற்கு, அட்ஜஸ்ட் செய்வதற்கு மற்றும் உறவுகளோடு வளைந்து நெளிந்து கொடுத்துப் போவதற்குக் கற்றுக் கொடுக்கும். ஒரு தவறு நடந்த பிறகான தருணங்களே பெற்றோர் மற்றும் பிள்ளைகள் இடையில் இருக்கும் நம்பிக்கையை ஆழமாக வளர்க்க உதவும் என்று ஆய்வு மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த 30 சதவீதத்தைப் பற்றிய மாயம் என்ன? அதாவது இது அடையக்கூடியது மற்றும் மீண்டும் மீண்டும் நடக்கப் போவது. பெரும்பாலானவர்கள் இதனை ஏற்கனவே செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். அழும்போது ஆறுதல் அளிப்பது, சிறு சிறு சந்தோஷங்களைக் கொண்டாடுவது, அடம் பிடிக்கும் போது கட்டி அணைத்துக் கொள்வது மற்றும் மீண்டும் மீண்டும் இதே விஷயங்களைச் செய்வது போன்றவை இதில் அடங்கும்.

இது தருணங்களை அளவிடும் விஷயம் கிடையாது. மாறாகக் கண் அசைவுகள் மூலமாகவும், சிறிய மறு உறுதி அளிப்புகள் மூலமாகவும், குழந்தை ஒரு விஷயத்தை வெளிப்படுத்தத் தடுமாறும்போது அதனைக் கவனிப்பது மற்றும் எந்த ஒரு விஷயத்திற்கும் பதில் அளிப்பதற்கு முன்பு ஆழமான ஒரு சுவாசம் எடுப்பது போன்றவை ஆகும். இந்தச் சிறிய செயல்பாடுகளைத் தொடர்ச்சியாகச் செய்யும்போது நாளடைவில் உங்களுடைய குழந்தைகள் மிகவும் பாதுகாப்பாகவும், மதிப்பு மிக்கதாகவும் உணருவார்கள்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்