ஜனாதிபதி அநுர பொதுமன்னிப்பு வழங்கினாரா?- சிறைச்சாலை திணைக்களம் விளக்கம்

7 ஆனி 2025 சனி 11:26 | பார்வைகள் : 953
வெசாக் பொது மன்னிப்பின் கீழ் ஒரு கைதியின் விடுதலை தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் குறித்து சிறைச்சாலைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கை தண்டனைச் சட்டத்தின் 386ஆவது பிரிவை மீறியதற்காக, அதுல திலகரத்னவை அனுராதபுரம் நீதவான் நீதிமன்றம் சிறையில் அடைக்க உத்தரவிட்டதுடன், அவருக்கு 2 மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அபராதம் செலுத்தப்படாவிட்டால், ஆறு மாத கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
2025 மே மாதம் 12 ஆம் திகதி வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, மே 5 ஆம் திகதி முதல் கைதிகளுக்கு வெசாக் பொது மன்னிப்பு நிபந்தனைகளுக்கு உட்பட்டு வழங்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்த மன்னிப்பு அதுல திலகரத்னவுக்கு வழங்கப்படவில்லை எனவும், இது பொதுவாக தகுதியான கைதிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டதாகவும் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.