பஹல்காம் தாக்குதலுக்கு ராணுவ தளபதி நீக்கமா? அரசு விளக்கம்

1 வைகாசி 2025 வியாழன் 06:54 | பார்வைகள் : 142
காஷ்மீரின் பஹல்காம் தாக்குதலுக்கு பின் நம் நாட்டு ராணுவத்தின் வடக்கு படை தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சுசிந்திர குமார் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக பாகிஸ்தான் ஆதரவு சமூக வலைதள கணக்குகளில் வெளியான செய்தியை அரசு மறுத்துள்ளது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின், உதம்பூரில் செயல்படும் நம் ராணுவத்தின் வடக்கு படையின் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சுசிந்திர குமார் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக பாக்., ஆதரவு சமூகவலைதளங்களில் தகவல் பரவின.
இந்த தகவலை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் செய்தி தொடர்பு நிறுவனமான பி.ஐ.பி., மறுத்துள்ளது. அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:
லெப்டினன்ட் ஜெனரல் சுசிந்திர குமார் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். இது முன்பே திட்டமிடப்பட்டது. இவருக்கு பதிலாக லெப்டினன்ட் ஜெனரல் பிரதிக் ஷர்மா புதிய வடக்கு ராணுவ கமாண்டராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த செய்தியை பல பாகிஸ்தான் ஆதரவு சமூக வலைதள கணக்குகளில் திரித்து உள்ளனர். அரசின் அதிகாரப்பூர்வ செய்தி ஆதாரங்களை மட்டுமே மக்கள் நம்பும் படி வலியுறுத்துகிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.