Mayotte இல் மக்ரோன்.. தீவுக்கூட்டத்தை மீட்டெடுக்க 800 மில்லியன் யூரோக்கள் தேவை!

19 மார்கழி 2024 வியாழன் 17:58 | பார்வைகள் : 8629
Mayotte தீவினை Chido சூறாவளி சூறையாடிச் சென்றத்தில் பெரும் சேதங்களை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், சேத விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
Mayotte தீவுக்கூட்டத்தினை மீட்டெடுக்க 650 தொடக்கம் 800 மில்லியன் யூரோக்கள் வரை தேவை என பிரெஞ்சு பொது காப்பீட்டு நிறுவனமான Caisse Centrale de Réassurance அறிவித்துள்ளது. Mayotte இல் உள்ள 6% சதவீதமான தனியார் கட்டிடங்கள் மட்டுமே வீட்டுக் காப்புறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, அங்கு பயணித்துள்ள ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், இன்று காலை முதல் உள்ளூர் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள், மருத்துவக்குழுவினர் என தொடர் சந்திப்பில் ஈடுபட்டு வருகின்றார். நிலமைகளை கேட்டறிந்து வருகிறார். Mayotte இனை மீட்டெடுப்பதற்கு ஒரு சிறப்புச் சட்டம் ஒன்றை பிரெஞ்சுப் பாராளுமன்றத்தில் கொண்டுவருவேன் எனவும் ஜனாதிபதி அவர்களுக்கு உறுதியளித்தார்.
அதேவேளை, பிரான்ஸ் முழுவதிலும் இருந்து Mayotte தீவுக்கான நன்கொடைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இல் து பிரான்ஸ் மாகாணசபை 500,000 யூரோக்கள் நன்கொடை வழங்கியுள்ளது.
இன்று வியாழக்கிழமையில் இருந்து விமான சேவைகளின் ஒரு பகுதி ஆரம்பமாகியுள்ளதாகவும், சனிக்கிழமையில் இருந்து முற்று முழுதாக அனைத்து விமானங்களும் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.