வெள்ளம்... 3,700 மீட்புப்பணிகள்.. பலர் வெளியேற்றம்.. ஆபத்து தொடர்கிறது...!

11 ஐப்பசி 2024 வெள்ளி 07:00 | பார்வைகள் : 6698
Seine-et-Marne மாவட்டம் இதுவரை கண்டிராத அளவு வெள்ளப்பெருக்கை இம்முறை சந்தித்துள்ளது. Grand Morin ஆற்றின் நீர்மட்டம் அதிகரித்து, நிரம்பி வழிந்து பல நகரங்களை மூடியுள்ளது. வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பலர் தவிக்க, மேலும் சிலர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நேற்றைய நாள் முழுவதும் தீயணைப்பு படையினர் 3,700 மீட்புப்பணிகளில் ஈடுபட்டிருந்தனர். கடைகள், விடுதிகள், தங்குமிடங்கள், அரங்குகள் என எங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. பல தொழிற்சாலைகளுக்குள் வெள்ளம் புகுந்து இயந்திரங்களை பழுதடையச் செய்துள்ளதாகவும் அறிய முடிகிறது.
அதேபோன்று Eure-et-Loir மாவட்டத்திலும் இதே நிலை தான். அங்கும் பல இடங்களில் வெள்ளம் பெரும் சேதங்களை ஏற்படுத்தியுள்ளது. புதன்கிழமை இரவு வரை அங்கு 130 மி.மீ மழை பதிவாகியுள்ளது. வீதி போக்குவரத்து, பாடசாலை போக்குவரத்துக்கள் என அனைத்தும் தடைப்பட்டுள்ளன.
1961 ஆம் ஆண்டு பதிவான வெள்ளத்தின் அளவை இந்த வருட வெள்ளம் அதிகம் எனவும், ’வரலாற்றின் மிக மோசமான வெள்ளம்’ என தெரிவிக்கப்படும் 1881 ஆம் ஆண்டு இடம்பெற்ற வெள்ள அனர்த்தத்துக்கு அருகே சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தலைநகர் பரிசில் 500 மீட்புப்பணிகள் இடம்பெற்றுள்ளன.