▶ பயங்கரவாத தாக்குதலின் பின்னணியில் பிரான்ஸ்! குற்றம்சாட்டும் இரஷ்யா - கோபத்தில் மக்ரோன்!

5 சித்திரை 2024 வெள்ளி 07:00 | பார்வைகள் : 10985
இரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலில் 144 பேர் கொல்லப்பட்ட நிலையில், இதன் பின்னணியில் பிரான்ஸ் இருப்பதாக இரஷ்யா தெரிவித்த கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரெஞ்சு ஆயுதப்படைகளுக்கான அமைச்சர் Sébastien Lecornu நேற்று முன்தினம் புதன்கிழமை இரஷ்யாவின் ஆயுதப்படை அமைச்சர் Sergei Choïgu உடன் தொலைபேசி வழியாக உரையாடியிருந்தார். இரஷ்ய-உக்ரேன் யுத்தம் ஆரம்பித்ததன் பின்னர் முதன் முறையாக இருவரும் உரையாடியிருந்தனர்.
இந்நிலையில், இந்த உரையாடலின் போது ‘இந்த தாக்குதலின் பின்னணியில் பிரான்ஸ் இருக்காது என நாம் நம்புகிறோம்!’ என Sergei Choïgu தெரிவித்திருந்தார். இச்சம்பவம் பெரும் எதிர்வினைகளை ஏற்படுத்தியுள்ளது. பயங்கரவாத தாக்குதல் ஒன்றின் பின்னால் பிரான்ஸ் இருப்பதாக தெரிவித்த கருத்து ஏற்கக்கூடியதில்லை என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்தார்.
‘இது ஒரு ’பரோக்’ (ஒழுங்கற்ற முறையில் உரையாடுவது) மற்றும் அச்சுறுத்தலான கருத்து. அபத்தமானது. பிரான்ஸ் இதற்கு பின்னால் இருக்கிறது என்றும், உக்ரேனியர்கள் பின்னால் இருக்கின்றார்கள் என்பதெல்லாம் அர்த்தமில்லாத பேச்சு!” என ஜனாதிபதி மக்ரோன் குறிப்பிட்டார்.