சிந்து நதிநீர் உத்தரவை நிராகரித்த இந்தியா

சிந்து நதிநீர் உத்தரவை நிராகரித்த இந்தியா

1 புரட்டாசி 2026 செவ்வாய் 09:50 | பார்வைகள் : 112


சிந்து நதிநீர் ஒப்பந்தம் தொடர்பாக உலக வங்கியால் அமைக்கப்பட்ட நடுவர் மன்றம் சட்டவிரோதமானது என தெரிவித்துள்ள இந்தியா, அந்த மன்றத்தின் அறிவிப்புகளை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகளை பயங்கரவாதிகள் மதத்தை கேட்டு கொடூரமாக கொன்ற சம்பவத்துக்கு பதிலடியாக, இந்திய ராணுவம் ஆப்பரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடங்கியது. இதையடுத்து, பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது.

ஆனால், இதை ஏற்க மறுத்த பாகிஸ்தான், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியது. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்தும் வரை, இந்த ஒப்பந்தம் செயல்பாட்டுக்கு வராது என இந்தியா தெரிவித்தது.

இதனை எதிர்த்து பாகிஸ்தான், நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள தீர்ப்பாயத்தை நாடியது.

இந்த வழக்கை விசாரித்த தீர்ப்பாயம், எந்த காரணத்தாலும் சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இடைநிறுத்துவதையோ அல்லது ரத்து செய்வதையோ நியாயப்படுத்த முடியாது என்றும், ஒப்பந்தத்தின் கீழ் உள்ள தனது கடமைகளை இந்தியா தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.

மேலும், மேற்கு நதிகளில் காஷ்மீரில் இந்தியா கட்டி வரும் நீர்மின் நிலையங்களின் கட்டுமானப் பணிகளை குறிப்பிட்ட வரம்பிற்குள் வைத்திருக்க வேண்டும் என்றும் தீர்ப்பாயம் தெரிவித்திருந்தது.

**இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:**

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்கும் இந்தியாவின் முடிவு தொடர்ந்து அமலில் உள்ளது. சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட நடுவர் மன்றம், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் இடைக்கால நடவடிக்கைகள் மற்றும் அதன் நிலை குறித்து தீர்ப்பு எனக் கூறி ஒன்றை வழங்கியுள்ளது.

சிந்து நதிநீர் ஒப்பந்த விதிமுறைகளை அப்பட்டமாக மீறி, உலக வங்கியால் இந்த நடுவர் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட அந்த அமைப்பின் முந்தைய அனைத்து அறிவிப்புகளையும் இந்தியா உறுதியாக நிராகரித்துள்ளது. அதேபோல், தற்போதைய தீர்ப்பையும் இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது.

அந்த அமைப்பின் முன் இந்தியா ஒருபோதும் ஆஜராகவில்லை. இந்தியாவின் இறையாண்மை முடிவுகள் தொடர்பாக தீர்ப்பு அளிக்க இந்த நடுவர் மன்றத்துக்கு எந்தவித அதிகார வரம்பும் இல்லை.

தற்போதைய அல்லது எதிர்காலத்தில் அந்த அமைப்பு வெளியிடும் அறிவிப்புகள், இந்தியா மேற்கொண்டு வரும் திட்டங்கள் தொடர்பான நடவடிக்கைகளில் எந்தவித விளைவையும் ஏற்படுத்தாது.

நடுவர் மன்றத்தை அமைத்ததே சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கடுமையான மீறலாகும்.

இவ்வாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தொடர்ந்து படிக்க