ஜல்லிக்கட்டு என்பது உணர்வு சம்பந்தப்பட்டது; அமைச்சர் நிர்மல்குமார்

ஜல்லிக்கட்டு என்பது உணர்வு சம்பந்தப்பட்டது; அமைச்சர் நிர்மல்குமார்

30 ஆவணி 2026 ஞாயிறு 07:40 | பார்வைகள் : 204


ஜல்லிக்கட்டு என்பது பொழுதுபோக்கு நிகழ்ச்சி அல்ல; அது நமது கலாசாரம் மற்றும் உணர்வுடன் தொடர்புடையது. கலைஞரின் பெயரை சூட்டுவதற்காகவே அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டுள்ளது என அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

**மதுரையில் நிருபர்களிடம் அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது:**

மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் எந்தவித பாரபட்சமும் இன்றி நடத்தப்படும். இதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

திமுகவினருக்கும், அக்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கும் கோவிலுக்கும் என்ன தொடர்பு? பத்திரிகையில் என் பெயரைப் போட வேண்டும், உன் பெயரைப் போட வேண்டும் என யாரும் கூற முடியாது. இது கோவில் தொடர்பான விஷயம்.

திமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் கட்டியதே அதற்கு 'கலைஞர் மைதானம்' என பெயர் வைப்பதற்காகத்தான். ஜல்லிக்கட்டு என்பது அந்தந்த ஊரின் பெருமை. அவனியாபுரம், பாலமேடு உள்ளிட்ட பகுதிகளில் அந்தந்த ஊர்களில் வாடிவாசல் திறந்து ஜல்லிக்கட்டு நடத்தி கொண்டாடி வருகின்றனர்.

**கலாசாரம், உணர்வு!**

ஜல்லிக்கட்டு என்பது பொழுதுபோக்கு நிகழ்ச்சி கிடையாது; அது நமது கலாசாரம், நமது உணர்வு. விளையாட்டு மைதானம் அமைத்து, மக்கள் ஜாலியாக அமர்ந்து பார்க்கும் நிகழ்வு அல்ல. அந்தந்த ஊர்களில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதுதான் அந்தந்த ஊருக்குப் பெருமை.

இவர்கள் ஸ்டேடியம் கட்டி, ஜல்லிக்கட்டை கொச்சைப்படுத்தி விட்டனர். தவெக தனது நிலைப்பாட்டில் தெளிவாக உள்ளது. எந்த விஷயத்திலும் யாரிடமும் சமரசம் செய்து கொள்ளப் போவதில்லை. என்ன செய்யப் போகிறோம் என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

**மக்கள் ஆசை!**

பிரதமர் பதவிக்கான போட்டியில் முதல்வர் விஜய் 3வது இடத்தில் இருப்பதாக கருத்துக்கணிப்பில் தகவல் வெளியாகியுள்ளது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு நிர்மல்குமார், "இந்தியா முழுவதும் ஒட்டுமொத்த மக்கள் ஒரு சிலவற்றிற்காக ஆசைப்படுகிறார்கள். அந்தந்த காலகட்டத்தில் எந்த மாதிரியான நடைமுறைகள் இருக்கிறதோ, அதை பார்ப்போம்" என பதிலளித்தார்.

இவ்வாறு நிர்மல்குமார் கூறினார்.
 

தொடர்ந்து படிக்க