ஆசிரியர் கொலையின் எதிரொலி - நாடு முழுவதும் குவிக்கப்படும் 7,000 படையினர்!

14 ஐப்பசி 2023 சனி 06:32 | பார்வைகள் : 9191
Arras (பா து கலே) நகரில் நேற்று இடம்பெற்ற தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டதை அடுத்து, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட உள்ளது.
நாளை மறுநாள் திங்கட்கிழமையில் இருந்து மறு அறிவித்தல் வரை நாடு முழுவதும் உள்ள பல நூறு முக்கிய ஸதலங்களில் காவல்துறையினர் மற்றும் ஊர்காவற் படையினர்
(la force Sentinelle) என மொத்தமாக 7,000 வீரர்கள் காவலில் ஈடுபட உள்ளனர். இதனை எலிசே மாளிகை (ஜனாதிபதி மாளிகை) ஒக்டோபர் 14, இன்று சனிக்கிழமை காலை அறிவித்துள்ளது.
பேராசிரியர் Samuel Paty படுகொலை செய்யப்பட்ட மூன்றாம் ஆண்டு நினைவு நாள் நாளை அனுஷ்ட்டிக்கப்பட உள்ள நிலையில், நேற்று d'Arras நகரில் உள்ள பாடசாலை ஒன்றில் முன்னாள் மாணவன் ஒருவர் மேற்கொண்ட பயங்கரவாத தாக்குதலில் ஆசிரியர் ஒருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் மூவர் காயமடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்தே இந்த பாதுகாப்பு பலப்படுத்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.