Paristamil Navigation Paristamil advert login

பெண்கள்  வாழும் அதிசய கிராமத்திற்கு செல்ல ஆண்களுக்கு தடை

பெண்கள்  வாழும் அதிசய கிராமத்திற்கு செல்ல ஆண்களுக்கு தடை

9 ஐப்பசி 2023 திங்கள் 08:47 | பார்வைகள் : 1199


கென்யா நாட்டில் பெண்கள் மட்டுமே வாழும் ஒரு கிராமம் குறித்த தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் உமோஜா எனும் கிராமத்தில் பெண்கள், குழந்தைகள் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர்.

30 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த கிராமத்தில் நுழைய ஆண்களுக்கு தடை உள்ளதாக கூறப்படுகிறது.

இங்கு வசிக்கும் பெண்கள் அனைவரும் மாசாய் எனும் சமூகத்தின் ஒரு பகுதியாகக் கருத்தப்படும் சம்பூர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். 

ஏன் இந்த கிராமத்தில் ஆண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்றால், பெண்களுக்கு எந்த உரிமையும் இல்லாததும், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதும் தான் என்று கூறப்படுகிறது.

குறிப்பாக, பல சமயங்களில் இந்த கிராமத்தின் பெண்கள் வயது முதிர்ந்த ஆண்களுடன் குழந்தைத் திருமணங்களுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் அவர்களுக்கு நில உரிமையோ, விலங்கு உரிமையோ இல்லாமல் இருந்துள்ளது. 

1990களில் பிரித்தானிய இராணுவ வீரர்கள் சம்பூர் இனப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் அப்பெண்களின் கணவர்கள் அவர்களை ஏற்க மறுத்துள்ளனர்.

குறிப்பிட்ட அளவிலான பெண்கள் தங்களின் குடும்பத்தாலும், கணவன்மார்களாலும் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர். 

இதன் காரணமாக வெகுண்டெழுந்த ரெபெக்கா லோலோசோலி என்ற பெண் 15 பெண்களுடன் சேர்ந்து உமோஜா கிராமத்தை நிறுவினார். தற்போது 40 குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றனர்.

பாரம்பரிய மணி மாலைகளை விற்று பொருளீட்டி வருகின்றனர். ஆண்கள் நுழைய தடை விதிக்கப்பட்ட நிலையிலும் இந்த கிராமத்து பெண்கள் குழந்தை பெறுகின்றனர்.

எப்படி என்றால் உடல் உறவுக்காக கிராமத்தை விட்டு வெளியேறி விரும்பிய ஆணுடன் உறவு கொண்டு கர்ப்பம் தரிக்கிறார்கள்.

அவ்வப்போது இந்த கிராமத்திற்கு அருகில் வசிக்கும் ஆண்கள், இப்பெண்களின் கால்நடைகளை திருடுகிறார்கள். எனினும் உமோஜா பெண்கள் தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து வருகின்றனர்.  

வர்த்தக‌ விளம்பரங்கள்