இலங்கையில் பேருந்து கட்டணத்தை அதிகரிக்க கோரிக்கை

2 ஐப்பசி 2023 திங்கள் 11:50 | பார்வைகள் : 9548
இலங்கையில் டீசல் விலை அதிகரிப்பு காரணமாக தனியார் பேருந்து பயணக் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.
பேருந்து பயணக் கட்டணத்தை குறைந்தது 5 சதவீதத்தினால் அதிகரிக்க வேண்டுமென அதன் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் கோரியுள்ளார்.
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒட்டோ டீசலின் விலை 10 ரூபாவினாலும், சுப்பர் டீசலின் விலையை 62 ரூபாவினாலும் அதிகரிக்க இலங்கை கனிய வள கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா லங்கா ஐஓசி நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்திருந்தன.
இதேவேளை, முச்சக்கர வண்டி கட்டணங்கள் அதிகரிக்கப்பட மாட்டாது என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார்.
எரிபொருள் விலை அதிகரிப்புக்கு ஏற்ப கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பாடசாலை சேவை போக்குவரத்து கட்டணத்தை வேன் உரிமையாளர்களின் விருப்பத்திற்கேற்ப தீர்மானிக்க முடியும் என அகில இலங்கை பாடசாலை போக்குவரத்து சங்கத்தின் தலைவர் மல்சிறி டி சில்வா தெரிவித்துள்ளார்.