Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

எண்மான உளத்தில் போதைப்பொருள் துர்ப்பாவனையைக் கட்டுப்படுத்தல்

எண்மான உளத்தில் போதைப்பொருள் துர்ப்பாவனையைக் கட்டுப்படுத்தல்

28 ஐப்பசி 2022 வெள்ளி 19:33 | பார்வைகள் : 14291


உள மருத்துவர்களின் புதிய பரிமாணமாக எண்மான உள மருத்துவர் (Digital Psychiatrist) உருவாகி உள்ளார். கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் உள மருத்துவ சிகிச்சையில் இது தொடர்பான ஆரம்ப அணுகுதல்கள் உருவாக்கப்பட்டன. 

 
இதன்மூலம் மனச்சோர்வு, உளப்பிளவை, பதகளிப்பு, தற்கொலை முயற்சிகளுக்கு உரிய மருத்துவ சேவையினை வழங்க முடிந்துள்ளது. எண்மானத் தரவுகளினை நேரடித் தரவுகள், மறைமுகத் தரவுகள் என இரு வகைகளில் பெறலாம். இதன் பிரயோகத்தினை உளநலச் செயலிகள் (mHealth Apps) மூலம் நடைமுறைப்படுத்தலாம்.
 
தற்போது எமது பிரதேசத்தின் பிரதான சமூக உளப் பிரச்சினையான போதைப்பொருள் துர்ப்பாவனையைக் கட்டுப்படுத்த எண்மான உள மருத்துவரை (Digital Psychiatrist) நாம் நாடலாம். இதன்போது தனிநபர் தகவல் இரகசியமாக அமைவதுடன் போதைப்பொருள் பாவிப்போர் ஒன்று சேர்வது, மீளவும் பாவிப்பது குறைக்கப்படும்.
 
உளநல மருத்துவர்கள், ஆரம்ப சுகாதார சேவையாளர்கள், பெற்றோர்கள், உறவினர்கள், உளவள ஆலோசகர் உட்பட பல்துறைசார் முறைமையில் எமது பிரதேசத்திற்கு உரிய உளநலச் செயலி உருவாக்கப்படல் வேண்டும்.
 
போதைப்பொருள் பாவிப்பவர்கள் கணணி விளையாட்டிற்கு அடிமையானவர்கள், சமூக வலைத்தளத்துப் பாவனையாளர்கள் என்பவர்களை எண்மான உளமருத்துவர் இலகுவாக கையாளுவர். இதற்கு உரிய செயலிகளை தொடுகை காண்பேசிகளில் சுலபமாக அணுகும் கட்டமைப்பினை உருவாக்கலாம். மேலும் பல மனநோய் நிலைக்கு உட்பட்டவர்கள் தமக்கு உரிய சிகிச்சைகளை உளநலச்செயலி மூலம் அணுகலாம். ஆபத்தான பழக்க வழக்கத்தில் உள்ளவர்கள் சுயமாகவே உள மருத்துவ சிகிச்சையை நாட உளநலச் செயலிகள் உறுதுணையாக அமையும். ஏனையவர்களுக்குத் தெரியாது. எனவே சிகிச்சையை நாடுவோர் எண்ணிக்கை அதிகமாகும்.
 
எனவே சமூகத்தில் புரையோடியுள்ள போதைப்பொருள் பாவனையில் இருந்து எமது சமூகத்தைக் காக்க எமக்குத் தேவையான எண்மான உள மருத்துவ மென்பொருளை நாம் விரைவில் உருவாக்குதல் மிகவும் அவசியமானது.
 
மின்னணு மனிதம் (iHuman)  எனும் மனிதன் கணணி இடையுறவில் மனிதனின் உளநோய்களைத் தீர்ப்பதற்கு எண்மான உளமருத்துவர் என்ற நிலை மிக முக்கிய பங்கினை வகிக்கும். இதன் ஆரம்ப நிலைகளை இன்று நாம் எமது சமூக விரவல் வலைத்தளங்களில் உருவாக்கலாம்.
 
போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துவதற்கான நவீன அணுகுமுறையாக எண்மான உள ஆற்றுப்படுத்தல் அமையும். குறிப்பாக போதைப்பொருள் பாவனையை ஆரம்பிக்கும் வயதினரான 15 – 25 வயதானவர்களின் காண்பேசிகளில் போதைப்பொருளினை அணுகும் தன்மையை கண்டறிந்து கட்டுப்படுத்த விசேட உளநலச் செயலிகளை நடைமுறைப்படுத்தலாம். இதன்மூலம் அவ்விளையவர்களுக்கு எண்மான உளமருத்துவர் சேவை செய்வார்.
 
நன்றி - சமகளம்

வர்த்தக‌ விளம்பரங்கள்