Paristamil Navigation Paristamil advert login

இதென்ன அதிசயமா இருக்கு...

இதென்ன அதிசயமா இருக்கு...

1 ஆடி 2014 செவ்வாய் 08:51 | பார்வைகள் : 16904


 ஒரு நாள் அலுவலகம் முடிந்து வீடு திரும்பிய ராமு, தனது நாய் பக்கத்து வீட்டு முயலை வாயில் கவ்வி ஓடி வருவதைப் பார்த்து திடுக்கிட்டான். நாய் வாயில் சிக்கிய முயல் இறந்து விட்டதை உறுதி செய்த ராமு, பக்கத்து வீட்டாருடன் வீண் வாதத்தை தவிர்க்க விரும்பினான். அதற்காக என்ன செய்தான் பாருங்கள்....

நாயின் வாயில் இருந்த முயலை பிடுங்கிய ராமு முதலில் அதை குளிக்க வைத்து, பின் யாருக்கும் தெரியாமல் சத்த மில்லாமல் பக்கத்து வீட்டு கூண்டில் போட்டு விட்டான்.

பிறகு மனதில் இப்படி நினைத்துக் கொண்டான், ‘அதிக குளிர் தாங்காமல் முயல் இயற்கையாக இறந்ததாக எண்ணி பக்கத்து வீட்டார் ஏமாந்து போவார்கள்' என மனதிற்குள் தன் சாமர்த்தியத்தை மெச்சிக் கொண்டான்.

சில நாட்கள் கழித்து எதேச்சையாக பக்கத்து வீட்டு மனிதரைச் சந்தித்தான் ராமு. ‘உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ராமு...'

ராமு: தெரியாதே என்ன விஷயம்...' பக்கத்து வீட்டுக்காரர்: கடந்த சில நாட்களுக்கு முன்னாடி எங்கள் வீட்டு முயல் உடல் நிலை சரியில்லாமல் இறந்து விட்டது.

ராமு: ஓஹோ அப்படியா... பக்கத்து வீட்டுக்காரர்: ஆமாம். ஆனால், இதில் ஆச்சர்யம் என்னவென்றால் நாங்கள் புதைத்த முயலை யாரோ தோண்டி யெடுத்து குளிக்க வைத்து எங்கள் வீட்டுக் கூண்டில் போட்டுள்ளார்கள்... ராமு.....????!!!