Paristamil Navigation Paristamil advert login

உரோமம் நரைப்பது ஏன்?

உரோமம் நரைப்பது ஏன்?

18 சித்திரை 2012 புதன் 18:53 | பார்வைகள் : 19491


நரைத்தமுடி அறிவின் அடையாளம்” என்பதெல்லாம் பொய் என்கிறது ஐரோப்பிய விஞ்ஞானிகள் குழு. கறுத்தமுடி நரைத்துப் போவது ஏன் என்பதற்கும் இப்போது விடை காணப்பட்டுள்ளது.

 
நம்முடைய உரோம செல்களில் இயற்கையாகவே சிறிதளவு ஹைட்ரஜன் பெராக்சைடு என்னும் வேதிப்பொருள் சுரக்கிறது. வயது அதிகரிக்கும்போது இவ்வாறு சுரக்கப்படும் ஹைட்ரஜன் பெராக்சைடின் அளவும் அதிகரிக்கிறது. உரோமத்திற்குள்ளேயே ஏற்படும் இந்த மாற்றங்கள் முடியை சாம்பல் நிறத்திற்கு மாற்றி அதன் பிறகு வெள்ளையாக்கிவிடுகிறது என்கிறார்கள் இந்த ஐரோப்பிய விஞ்ஞானிகள்.
 
உரோமத்திற்கு இயற்கையாகவே நிறமூட்டுவது மெலனின் என்னும் வேதிப்பொருளாகும். உரோமம், கண்கள், தோல் இவற்றின் நிறத்தை தீர்மானிப்பது இந்த மெலனின் தான். மெலனின் சுரப்பதை ஹைட்ரஜன் பெராக்சைடு தடைசெய்துவிடுவதுதான் பிரச்சினையின் மூலவேர்.
 
மனிதர்களின் உரோமக்கால்களின் மாதிரிகளை பகுப்பாய்வு செய்து இந்த முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. உரோமக்கால்களில் சுரக்கும் ஹைட்ரஜன் பெராக்சைடை தண்ணீராகவும், ஹைட்ரஜன் வாயுவாகவும் சிதைவடையச் செய்யும் பணியை MSR A and B என்னும் என்சைம்கள் செய்கின்றன. MSR A and B என்சைம்கள் சுரப்பது குறைவடையும்போது ஹைட்ரஜன் பெராக்சைடு சிதைவடைவதும் குறைந்துபோகிறது. ஹைட்ரஜன் பெராக்சைடு அதிகரிப்பதால் tyrosinase என்னும் என்சைம் உற்பத்தியாவதும் நின்று போய்விடுகிறது. மயிர்க்கால்களில் மெலனின் சுரப்பதற்கு இந்த tyrosinase எனப்படும் என்சைம்தான் காரணம்.