டோட்டலைசர் கருவி: மத்திய அரசிடம் விளக்கம் கேட்கும் சுப்ரீம் கோர்ட்
2 புரட்டாசி 2026 புதன் 06:27 | பார்வைகள் : 140
தேர்தல்களில் எந்தக் கட்சிக்கு வாக்களித்தார் என்ற ரகசியத்தைப் பாதுகாக்கும் வகையில், ‘டோட்டலைசர்’ கருவியைப் பயன்படுத்தி வாக்குகளை எண்ணுவது தொடர்பாக மத்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர்களின் ரகசியத்தைப் பாதுகாக்க கோரிக்கை
தேர்தல்களில் வாக்குப்பதிவின்போது குறிப்பிட்ட வாக்குச்சாவடியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்தன என்பதை அறிந்துகொள்வதால், தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகள் ஏற்படுவதற்கும், வாக்காளர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாவதற்கும் வாய்ப்பு இருப்பதாகக் கூறி, யோகேஷ் குப்தா சார்பில் மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், 14 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஒன்றாக இணைத்து, அவற்றில் பதிவான வாக்குகளை மொத்தமாக எண்ணும் ‘டோட்டலைசர்’ கருவிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பு வாதம்
மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யாயா மற்றும் மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன் வாதிடுகையில், வாக்காளர்களின் தனியுரிமையைப் பாதுகாக்கவும், தேர்தலுக்குப் பிந்தைய வன்முறைகளைத் தடுக்கவும் உலகளவில் ‘டோட்டலைசர்’ இயந்திரம் பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தனர்.
மேலும், தேர்தல் ஆணையத்தின் நிபுணர்கள், சட்ட ஆணையத்தின் 255-வது அறிக்கை, சட்ட அமைச்சகம் மற்றும் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை நிபுணர்களும் இந்தத் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாக அவர்கள் கூறினர்.
கடந்த 2018-ம் ஆண்டிலேயே தேர்தல் ஆணையம், ‘டோட்டலைசர்’ கருவிகளை அறிமுகப்படுத்துவதற்கான காலம் வந்துவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
தேர்தல் நடத்தை விதிகள் பிரிவு 169-ன் கீழ், தேர்தல் ஆணையத்துடன் ஆலோசித்து மத்திய அரசே விதிகளைத் திருத்த முடியும் என்பதால், இதற்காக நாடாளுமன்றத்தில் புதிய சட்டம் இயற்ற வேண்டிய அவசியமில்லை என்றும், நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் மட்டுமே தேவை என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
தேர்தல் ஆணையம் எதிர்ப்பு
தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தாமா சேஷாத்ரி நாயுடு வாதிடுகையில், தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தியபோது, 50 சதவீத தேசியக் கட்சிகளும், 68 சதவீத மாநிலக் கட்சிகளும் ‘டோட்டலைசர்’ பயன்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறினார்.
மேலும், மத்திய அமைச்சர்கள் குழுவும் இந்தத் திட்டத்தை நிராகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
வாக்கு எண்ணிக்கையின்போது படிவம் 17சி மூலம் முகவர்கள் சரிபார்க்கும் நடைமுறை, ‘டோட்டலைசர்’ கருவியைப் பயன்படுத்தினால் சாத்தியமாகாது என்றும், ஒப்புகைச் சீட்டு ரசீதுகளைச் சரிபார்ப்பதிலும் சிக்கல்கள் ஏற்படும் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைகளை மட்டுமே வழங்க முடியும் என்றும், தேர்தல் நடத்தை விதிகளில் சட்டப்பூர்வ திருத்தங்களை மேற்கொள்ளும் அதிகாரம் மத்திய அரசிடமே உள்ளது என்றும் அவர் வாதிட்டார்.
மத்திய அரசு நிலைப்பாட்டை தெரிவிக்க உத்தரவு
இதைத் தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘டோட்டலைசர்’ கருவியை முற்றிலுமாக நிராகரிக்காமல், அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களை தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவித்தனர்.
எனவே, ‘டோட்டலைசர்’ கருவிகளை அறிமுகப்படுத்துவது தொடர்பாக தேர்தல் நடத்தை விதிகளில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வது குறித்து மத்திய அரசு தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தேர்தல் நடத்தை விதிகள் 1961-ன் விதி 59ஏ மற்றும் சட்ட ஆணையத்தின் 255-வது அறிக்கையில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகளை மத்திய அரசு ஆழமாகப் பரிசீலிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், ‘டோட்டலைசர்’ முறையை கொண்டு வருவதில் ஏதேனும் தடைகள் அல்லது எதிர்மறையான தாக்கங்கள் ஏற்படுமா என்பது குறித்தும் மத்திய அரசு ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது.
இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் உரிய கோரிக்கை அல்லது பரிந்துரையை மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்ப வேண்டும் என்றும், அதன் மீது மத்திய அமைச்சரவை தகுந்த முடிவை எடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.



